கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இசை அமைப்பாளர் தான் அனிருத். 2011 ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் தான் அவரின் முதல் படமாக அமைந்தது. ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் அனிருத்தும் தனுஷும் உலகம் அறியும் பிரபலங்களாக மாறினர்.
தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என முக்கிய நடிகர்களுக்கு இசையமைத்து டாப் இசையமைப்பாளர் பட்டியலில் அவர் இணைந்தார். எந்த ஒரு டாப் நடிகர் படம் என்றாலும், அதில் இசையமைப்பது அனிருத் என்றால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் சொல்லும் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார்.
அண்மையில் அவர் இசையமைப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதில் அனிருத் இசையமைத்த மனசிலாயோ பாடல் ஹிட்டானது. இதேபோல் படத்தின் பின்னணி இசையிலும் அனிருத் வழக்கம் போல பட்டையை கிளப்பி இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது, அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் அனிருத் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பாடல்களை அவர் முடித்து விட்டதாகவும், பின்னணி இசையில் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்திற்கு வேதாளம் மற்றும் விவேகம் என இரண்டு திரைப்படங்களில் அனிருத் பணி புரிந்திருந்தார்.
இதேபோல், சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். அண்மையில் அவர் நேரடி தெலுங்கு படமான தேவராவில் இசையமைத்தார். இதன் பாடல்கள் ஹிட் ஆக தெலுங்கு திரையுலகிலும் அவர் கவனத்தை ஈர்த்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட் உலகத்திற்கு அனிருத் செல்ல இருக்கிறார். ஏற்கனவே ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த அனிருத், தற்போது அவரின் அடுத்த படத்திற்கும் பணி புரிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு கிங் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 10 மாதங்களில் கிட்டத்தட்ட 50 பாடல்களில் கவனம் செலுத்த இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





