தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் தயாரிப்பாளராக இருப்பவர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார். இவர் அசுரவதம், மாஸ்டர், சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்து வாக்குல ரெண்டு காதல், நாகப்பாம்பு, லியோ, காதல் காப்பீட்டு நிறுவனம் ( எல்ஐகே) உள்ளிட்ட படங்களை தயாரித்தவர்.மேலும் வாரிசு, வாத்தி, லியோ ஆகிய படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தயாரிப்பாளர் லலித்குமார், தனது மகனை தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கி புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்த படத்தில் அவர் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் வெற்றிமாறனிடம் 15 ஆண்டுகளாக கோ டைரக்டராக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.
ஆனால் இந்த படத்தின் கதையை சுரேஷ் எழுதவில்லை. டாணாக்காரன் படத்தை இயக்கிய டைரக்டர் தமிழ் எழுதிய கதையை தான், சுரேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது இயக்குனர் தமிழ் எழுதிய கதையை, வெற்றிமாறனின் கோ டைரக்டராக பணிசெய்த சுரேஷ் டைரக்ட் செய்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் கதை குறித்து, இயக்குனர் வெற்றிமாறனிடம் கோ டைரக்டர் சுரேஷ் கூறியிருக்கிறார். அப்போது ஏறக்குறைய விசாரணை படத்தின் கதையைப் போலவே, இந்த படத்தின் இந்த கதை இருப்பதாகவும், இந்த படம் வெளிவந்தால், விசாரணை படத்தின் இன்னொரு பகுதி போல இருக்கும் என்றும் வெற்றிமாறன் கமெண்ட் செய்திருக்கிறார்.
இப்படி வெற்றிமாறன் சொல்வதற்கு முக்கிய காரணம், போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் 75 சதவீத காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனில் எடுக்கப்படும் காட்சிகளாகவே இருக்கும். போலீஸ்க்கும் கைதிக்கும் நடக்கும் பிரச்னைகள்தான் படத்தின் மையக்கரு என்றும் கூறப்படுகிறது. இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளது.
விசாரணை படம் எப்படியோ, அதே போலவே இந்த படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் தமிழ் இயக்கிய டாணாக்காரன் படமும் போலீஸ் பயிற்சி பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய ஒரு கதையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த படத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் மகன் ஒரு ஹீரோவாகவும், இன்னொரு ஹீரோவும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த ஹீரோ யார் என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.





