இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடைசியாக 2025ம் ஆண்டில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. சத்யராஜ் ஸ்ருதிஹாசன் அமீர்கான் உபேந்திரா நாகர்ஜூனா என நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தும் படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.
ஆனால் இந்த படத்தில் மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் மிகவும் அட்டகாசமான மிரட்டலான நடிப்பை தந்திருந்தார். மேலும் மோனிஷா சிறப்பு பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவின் நடனமும் பெரிய அளவில் வைரலானது. மற்றபடி இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தையே தந்தது.
இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் வரும் ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் 2 ரிலீஸ் என முதலில் தகவல் வெளியானது.
அதன்பிறகு வருகிற செப்டம்பர் 3ம் தேதி ஜெயிலர் 2 படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகிவிடும் என்று கூறப்பட்டது. ஏனெனில் ரஜினிகாந்த் அடுத்து தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படமும் உருவாக இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் ஒரு படத்தை ராஜ்கமல் நிறுவனமும், மற்றொரு படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும் தயாரிக்க உள்ளன.
ஆனால் இப்போது வெளியான லேட்டஸ்ட் தகவலின்படி வருகிற செப்டம்பர் 3ம் தேதி ஜெயிலர் 2 படம் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை அறிவிப்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இதன் முதல் பாகம் 600 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், ஜெயிலர் 2 படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று சன்பிக்சர்ஸ் விரும்புகிறது.
அதனால் பண்டிகை காலத்தில் இந்த படம் வெளியாவதே பெரிய வசூலை அள்ளுவதற்கு வசதியாக இருக்கும். செப்டம்பர் மாதம் தவிர்த்தால் அதன்பிறகு விரைவில் தீபாவளி வந்துவிடும். அதனால் தீபாவளிக்கு ஜெயிலர் 2 படத்தை ரிலீஸ் செய்யும் ஒரு திட்டத்தில் சன் பிக்சர்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது இந்த தீபாவளி தலைவர் தீபாவளிதான் என ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





