இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கி வசூல் சக்கரவர்த்தியாக விளங்குபவர் தளபதி விஜய். அவரது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் ஒரு தனி ஓப்பனிங்கே இருக்கும். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு விஜயின் திரைப்படங்கள் திரையரங்குகளில் கொண்டாடும் சூழலை ஆண்டாண்டு காலமாக பார்க்க முடிகிறது.
அண்மையில் வெளியான அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், அது எதுவும் தயாரிப்பாளருக்கு வசூல் ரீதியாக தோல்வியை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் முதல் நாள் வசூலே விஜயின் திரைப்படங்கள் 50 கோடி ரூபாயை அசால்டாக கடக்கின்றன.
இப்படியான சூழலில், சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்கி இருக்கிறார் விஜய். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்திருக்கும் அவர், முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார். அண்மையில், விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட அரசியல் கூட்டத்தை அவர் நடத்தினார்.
தனது முதல் மாநாட்டில் திராவிடமும் தமிழ் தேசியமும் தான் தனது கொள்கை என்று கூறினார் விஜய். இப்படி அரசியல் பாதைக்கு சென்று இருக்கும் அவர், தற்போது நடித்துவரும் படத்துடன் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்து சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் வினோத்.
கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் நரேன் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் பாடலுக்கான சூட்டிங் முடிந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விஜய் வினோத் திரைப்படம், தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று பலரும் கூறி வந்தார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்க்காக புது கதையை தான் வினோத் உருவாக்கி இருப்பதாகவும், அது தற்போது காட்சியாக வளர்ந்து வருவதாகவும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விஜயின் மகள் கதாபாத்திரத்தில் தான் மமீதா பைஜூ வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





