தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த பிரபாஸ், ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிறகு மிகப்பெரிய ஸ்டார் நடிகராக மாறிவிட்டார். இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகராக அவரை பாகுபலி படம் மாற்றிவிட்டது. மேலும் உலக அளவில் அதிக அளவில் ரசிகர்களை பெற்ற ஒரு இந்திய நடிகராகவும் பிரபாஸ் உருவாகிவிட்டார்.
தொடர்ந்து கல்கி 2898 ஏடி உள்ளிட்ட அவர் நடித்து வரும் படங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் 500 கோடி 1000 கோடி ரூபாய் என வசூலித்து வருகின்றன. ஆனால் 1979 அக்டோபரில் பிறந்த அவரது வயது 45 கடந்த நிலையிலும் பாகுபலி படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையிலும் இன்னும் அவர் திருமணம் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்காமல் இருக்கிறார்.
அவரது திருமணம் தொடர்ந்து தாமதமாவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நடிகர் பிரபாஸூக்கும் பாகுபலி படத்தில் தேவசேனையாக நடித்திருந்த நடிகை அனுஷ்காவுக்கும் இடையே காதல் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. ஆனாலும் இருவரும் அது பற்றி எதுவும் கூறாமல் மௌனமாக இருந்து வருகின்றனர்.
பாகுபலி படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்த அனுஷ்கா, தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் பருமனான தோற்றத்தில் நடித்திருந்தார். இதனால் உடல் எடை அதிகரித்துஅவரது ஸ்லிம் ஆன தோற்றமே மாறிவிட்டது. உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு இருந்தும் உடல் எடை குறையாத நிலையில், இப்போது பழைய நிலைக்கு உடம்பு திரும்பியதால் நடிக்க துவங்கி விட்டார்.
இந்த நிலையில் பிரபாஸின் அம்மா சிவக்குமாரி, பிரபாஸ் திருமணம் தாமதமாவது குறித்து ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பிரபாஸின் அம்மா சிவகுமாரி கூறுகையில், பிரபாஸிற்கு ரவி என்ற ஒரு நெருங்கிய நண்பர் இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. திருமணத்துக்கு பிறகு போராட்டங்கள் நிறைந்ததாக மாறி, கடைசியில் கசப்பான முடிவுடன் அவரது திருமண வாழ்க்கை அமைந்துவிட்டது.
இது பிரபாஸை ரொம்பவும் பாதித்தது. அதனால்தான் திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் மோசமாக இருக்குமோ, விரைவில் அது முறிந்து விடுமோ என்கிற ஒரு எண்ணம் பிரபாஸ் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. அதனாலயே திருமணத்தில் அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். இருந்தாலும் ஒரு நாள் அவரது மனநிலை மாறும் என்று சிவக்குமாரி கூறியிருக்கிறார்.





