நடிகர் விஜயுடன் சூர்யா இணைந்து நடித்த படம் நேருக்கு நேர். இயக்குனர் வசந்த் இயக்கிய இந்த படத்தில்தான் சூர்யா நடிகராக அறிமுகமானார். விஜய்க்கு ஜோடியாக கௌசல்யாவும் சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரனும் நடித்திருந்தனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் ரகுவரன் சாந்தி கிருஷ்ணா கரண் விவேக் தாமு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
நேருக்கு நேர் படத்துக்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்து இருந்தார். இதில் ரகுவரனும் சாந்தி கிருஷ்ணாவும் கணவன், மனைவி. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருப்பார். கடைசியில் வில்லன் ஆட்களால் குழந்தை கடத்தப்பட விஜயும் சூர்யாவும் இணைந்து குழந்தையை காப்பாற்றுவார்கள். அதுவரை இருவரும் அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக் போல முறைத்துக் கொண்டே இருப்பார்கள்.
ரகுவரனின் தம்பியாக விஜயும் சாந்தி கிருஷ்ணாவின் தம்பியாக சூர்யாவும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இணைந்த விஜய் சூர்யா மீண்டும் பிரண்ட்ஸ் படத்திலும் ஒன்றாக நடித்திருந்தனர். அந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது. அதே போல் விக்ரமன் இயக்கத்தில் விஜய் சில காட்சிகளில் மட்டுமே நடித்த உன்னை நினைத்து படத்தில் இருந்து அவர் விலகியதால், சூர்யா அந்த படத்தில் நாயகனாக நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
வசந்த் இயக்கத்தில் வெற்றி பெற்ற நேருக்கு நேர் படத்தில்தான் சூர்யா நடிகராக, இரட்டை நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். ஆனால் இந்த படத்தில் முதலில் விஜயுடன் இணைந்து சூர்யா கேரக்டரில் நடித்தவர் நடிகர் அஜீத்குமார் தான். எலியும் பூனையுமாக இரண்டு இளைஞர்கள் மோதிக் கொள்ளும் விதமான இந்த கதைக்களத்தில் அஜீத்குமார் சில நாட்கள் பாடல் காட்சிகளிலும் சில முக்கிய காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் தன்னை விட விஜய்க்கு படத்தில் அதிக முக்கியத்துவம் இருப்பது போல் அஜீத்குமாருக்கு தோன்றியதால் நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜீத்குமார் விலகியிருக்கிறார். அந்த சமயத்தில்தான் நடிகர் சிவக்குமார் மகன் சூர்யாவை இந்த படத்தில் அஜீத்குமார் நடித்த அந்த கேரக்டரில் இயக்குனர் வசந்த் நடிக்க வைத்திருக்கிறார்.
நடிகர்கள் விஜய் அஜீத்குமார் இருவருமே சம காலத்தில் தமிழ் சினிமாவுக்குள் நாயகர்களாக வந்தவர்கள். அவர்கள் வளர்ந்து வந்த காலகட்டத்தில் கடந்த 1995ம் ஆண்டில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய் அஜீத்குமார் இணைந்து நடித்திருந்தனர். அதற்கு பின்தான் நேருக்கு நேர் படத்தில் இணைந்து நடித்தனர். ஆனால் அஜீத்குமார் தனக்கு முக்கியத்துவம் குறைந்ததால் அந்த படத்தில் இருந்து விலகினார். அதற்கு பின் இதுவரை அஜீத்குமார் விஜய் இணைந்து நடிக்கும் ஒரு வாய்ப்பே தமிழ் சினிமாவில் இல்லாமல் போய்விட்டது.





