நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பாடல் ஆசிரியர் என திரைத்துறையில் பல பரிணாமங்களில் கலந்து கட்டி அடிப்பவர் பார்த்திபன். புதிய பாதை என்னும் திரைப்படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை அவர் இயக்கவும் செய்திருந்தார். மிகப்பெரும் வெற்றியை இந்த திரைப்படம் பெற்றது. அதிலிருந்து பார்த்திபனின் பயணமும் ஆரம்பித்தது.
எதை எடுத்தாலும் வித்தியாசம்… இதுதான் பார்த்திபனின் சக்சஸ் ஃபார்முலா என்று கூறலாம். இந்த ஒரு விஷயத்தின் காரணமாகவே அவர் வெள்ளித்திரையில் இன்று வரை பிரகாசமானவராக இருந்து வருகிறார். நடுவே அடுத்தடுத்து அவர் தோல்வி திரைப்படங்களைக் கொடுத்தாலும், அதிலிருந்து எளிதில் மீண்டு வரும் வகையில் அவர் செயல்பட்டு விடுவார்.
இதில் பார்த்திபனிடம் அதிகமாக பேசப்பட்டது நகைச்சுவை என்ற விஷயம் தான். வடிவேலுவுடன் அவர் இணைந்து நடித்த திரைப்படங்களில் அடித்த லூட்டிகள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. கவுண்டமணி செந்தில் போல பார்த்திபன் வடிவேலு காமினேசனும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவர்கள் இணையும் திரைப்படங்களுக்கு அவ்வளவு பெரிய கிராக்கி இருந்து வந்தது.
சமீபகாலமாக இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் பார்த்திபன். கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனும் திரைப்படத்தை கொடுத்து அதில் வெற்றியும் பெற்றார். கோடிட்ட இடங்களை நிரப்புக என்னும் அவரது திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்காக பாராட்டையும் பெற்றார்.
இதன் நடுவே அவர் சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இதில் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில், கேமியோ ரோலில் பார்த்திபன் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கான டப்பிங் பணிகளை தற்போது பார்த்திபன் முடித்திருக்கிறார். அது தொடர்பாக தனுசுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஆடுகளம் திரைப்படத்தில் நான் நடிக்க முடியாமல் போனது, இணைந்து நடித்த சூதாடி திரைப்படமும் நின்று போனது, இதை ஈடு கட்டும் விதமாக இட்லி கடையில் மினி இட்லியாக கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் என்னை அழைத்தபோது ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். இதைப் பார்த்ததும் தனுஷ் ரசிகர்கள் ஆடுகளம் படத்தில் பார்த்திபன் நடிப்பதாக இருந்ததா அப்படி என்றால் அவருக்கு வெற்றிமாறன் என்ன கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார் என்று ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





