தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய ஏவிஎம் நிறுவனம் பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறது. குறிப்பாக கடந்த 1980 90களில் வெளியான ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் ஏவிஎம் சரவணன் 86 வயதான நிலையில் மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் சிவக்குமார் சூர்யா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது. திரு ஏவிஎம் சரவணன் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு என் அண்ணன் சந்திரஹாசன், சாருஹாசனுக்கும் எனக்கும் உள்ள உறவு போன்றது. இந்த உறவுக்கு என்ன பொருள் சொல்வது?
இவர்களுக்கு எந்த மாதிரியான மரியாதை தருவது என்ற ஒரு குழப்பம் சிறுவயதில் ஏற்பட்டது உண்டு. நான் என் இருபது வயதை தாண்டும் போது இவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை என்ன என்பதை என் அடிமனது முடிவு செய்துவிட்டது. ஒரு தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தான் இவர்களுக்கு தருவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.
அப்படித்தான் என் மனதில் நினைத்துக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். திரு குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாகவே நான் உரிமை கொண்டாடுகிறேன். இப்படி உரிமை கொண்டாடும் நான் தனி மரம் அல்ல. ஏவிஎம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன்.
பெரும் கலைஞர்கள் விட்டுச் சென்ற அடிச்சுவட்டில் என் சிறுபாதத்தை எப்படி பதிந்து நடக்க வேண்டும் என்று பல பெரிய ஆசான்கள் எனக்கு இந்த வளாகத்தில் இந்த தோப்பில் இன்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். பேர் சொல்லும் பிள்ளையாக சரவணன் இருந்திருக்கிறார். அவரது சகோதரர்களும் தான். அது போன்ற ஒரு பிள்ளையாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன். என் ஆசையெல்லாம் இந்த தோப்பில் மூன்றாம் தலைமுறை தோன்றியிருக்கிறது. அவர்களும் என்னை போன்ற பல செடிகளை நட்டு இந்த பெரும்பள்ளியின் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டும்.
இதுதான் அன்னாரின் மக்களாக நாம் செய்யும் கடமை என்று நான் நம்புகிறேன். மற்றபடி அந்த ஏவிஎம் வளாகமும் அங்கு வேலை செய்து ரிடையர் ஆனவர்களுக்கும் வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் இருக்கும் சோகம் அதில் நானும் பங்கு கொள்கிறேன். வெளி உலகத்திற்கு இதுபோன்ற பின்னணி ஆளுமைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் அவரை வணங்குவதற்கான காரணம் எங்கள் வாழ்க்கையை பார்த்தாலே புரிந்துவிடும். முக்கியமாக எங்கள் கலை வாழ்க்கை அவருக்கு நன்றி சொல்லும் ஒரே வழி, அவர் கண்ட பாதையில் வீறுநடை போட்டு நடப்பதுதான். நன்றி ஐயா அனைத்திற்கும் என்று கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





