நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அந்த படம் வெளியாகாமல் நின்று போனது பெரிய வருத்தத்தை தந்திருக்கிறது. சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் இறுதி தீர்ப்பு குறித்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு ஒத்தி வைத்து விட்டது.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என்று பொங்கலுக்கு முன்பே அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு வெளியிட்டார். நடிகர் விஜய் நடித்த மாஸ் ஹிட் படங்களில் மிக முக்கியமானது தெறி படம். இதில் போலீஸ் அதிகாரியாகவும் பேக்கரி ஓனராகவும் 2 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய் அசத்தியிருப்பார்.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார். மேலும் எமி ஜாக்சன் ராதிகா சரத்குமார் மொட்டை ராஜேந்திரன் இயக்குனர் மகேந்திரன் பிரபு காளிவெங்கட் நடிகை மீனாவின் மகள் நைனிகா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படமாகும்.
ஜனநாயகன் திரைக்கு வராத நிலையில் தெறி படம் ஜனவரி 15ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படும் என்று தாணு அறிவித்தார். தெறி படத்தை தளபதி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் வா வாத்தியார் தலைவர் தம்பி தலைமையில் போன்ற படங்கள் ரிலீஸ் ஆவதால் தெறி படம் ரி ரிலீஸை தள்ளி வைக்க சில தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதனால் தெறி படம் ரி ரிலீஸ் தேதியை 15ம் தேதிக்கு பதிலாக வருகிற 23ம் தேதிக்கு தயாரிப்பாளர் தாணு ஒத்தி வைத்தாா். ஆனால் இப்போது 23ம் தேதி அஜீத்குமார் நடித்த 50வது படம் மங்காத்தா ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் மோகன்ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி 2 படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதனால் மீண்டும் தயாரிப்பாளர்கள் தாணுவிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு விஜய் நடித்த தெறி படத்தின் ரி ரிலீஸ் தேதி 23 இல்லை என்பதை அறிவித்து பின்னர் ரி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதனால் ஜனநாயகன் படம்தான் திரைக்கு வரவில்லை. தெறி படத்தையாவது திரையில் மீண்டும் பார்க்கலாம் என்று காத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமும் விரக்தியும் ஏற்பட்டுள்ளது.





