தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் கடந்த 1980களில் வில்லன் நடிகராக அறிமுகமானவர். சட்டம் என் கையில் என்ற படத்தில் நடிகர் கமலுக்கு வில்லனாக அவர் நடித்திருந்தார். அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடித்து மிரட்டினார். குறிப்பாக நான் சிவப்பு மனிதன் 100வது நாள் போன்ற படங்களில் வில்லனாக சத்யராஜ் அசத்தியிருப்பார்.
அதன்பிறகு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் படத்தில் சத்யராஜ் கதாநாயகனாக மாறினார். பிறகு ரிக்ஷா மாமா பிரம்மா திருமதி பழனிசாமி அமைதிப்படை என பல வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்தார். குறிப்பாக 1990களில் அவரது பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன.
ஆனால் ஒரு கட்டத்தில் இளம் நடிகர்களின் வருகை அதிகரித்ததால் சத்யராஜின் ஹீரோ இமேஜ் மார்க்கெட் சரிந்து விட்டது. அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் சத்யராஜ் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ரசிகர்கள் புரட்சித் தமிழன் சத்யராஜ் என்று அழைக்கின்றனர்.
இதற்கு காரணம் பகுத்தறிவு பேசும் நடிகர் சத்யராஜ் கடவுள் மறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் கொள்கைகளை பின்பற்றும் ஒரு நாத்திகவாதியாகவும் தன்னை சத்யராஜ் பல ஆண்டுகளாக வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவர் சமீபகாலமாக திமுக ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். அவரது மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன் இயக்கிய பல படங்களில் நடித்துள்ள சத்யராஜ் அதில் கடவுள் மறுப்பு கொள்கைளை பேசியவர். தொடர்ந்து கடவுள் மறுப்பு கூட்டங்களில் திராவிட இயக்ங்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா நடித்த சீதா பயணம் என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ், தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தத்திற்கு ராமர் சிலையை பரிசாக வழங்கினார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் இதை பார்த்த பலரும் தமிழ்நாட்டில் நாத்திகம் பேசுகிறார். ஆந்திராவில் ஆத்திகமா என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.





