குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. 2011 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த அவர், தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ச்சி பெற்று உள்ளார்.

ராமோஜி ராவ் தயாரிப்பில் வெளியான நுவ்விலா படத்தின் மூலம், விஜய் தேவரகொண்டா அறிமுகமானார். ரொமான்டிக் காமெடி ஜானரில் வெளியான இந்த திரைப்படத்தில் கல்லூரி மாணவர்களில் ஒருவராக அவர் நடித்திருந்தார். இதன் பிறகு, தெலுங்கில் புகழ்பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் லைப் இஸ் பியூட்டிஃபுல் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா வந்து போனார்.
விஜய் தேவரகொண்டாவை இந்திய சினிமாவே உற்று நோக்கி கவனித்த திரைப்படம் எது என்றால் அது அர்ஜுன் ரெட்டிதான். எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆக்ரோஷமான இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்து, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் விஜய் தேவரகொண்டா. அது மட்டும் இல்லாமல் பெண்களின் விருப்பமான நடிகராகவும் அவர் உருவெடுத்தார்.

பின்னர் கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய் தேவரகொண்டாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. இவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதை கவனித்த நடிகர், நோட்டா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சமந்தாவுடன் குஷி என்னும் காதல் படத்தில் விஜய் தேவார கொண்டா நடித்திருக்க, அதற்கான ப்ரொமோஷன் பணிகளில் நடிகர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவரிடம் கேள்வி எழுப்பிய ஒருவர், நீங்கள் எப்போதும் வெற்றிமாறன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்களே… மற்ற யாரும் உங்களுக்கு கண்ணில் தெரியவில்லையா என்று வினவினார். இதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, எனக்கு வேறு யாரும் இயக்குனர்களை தெரியவில்லையா என்றா கேட்கிறீர்கள்.
எனக்கு அருண் பிரபுவை ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு அருண் பிரபு என்றால் யார் என்று தெரியுமா. அருவி, வாழ் என இரண்டு திரைப்படங்களை அவர் இயக்கி இருக்கிறார். ஸ்ரீ கார்த்திக் யார் என்று தெரியுமா. அவரும் சார்வானந்தத்தை வைத்து வெற்றி படத்தை இயக்கியுள்ளார். கேப்டன் மில்லர் படத்தை எடுத்த அருண் மாதேஸ்வரனையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார். விஜய் தேவரகொண்டாவின் இந்த பதிலால் அரங்கமே கலகலக்க, கேள்வி கேட்ட செய்தியாளர் கப்சிப் என்றாகினார்.





