தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனர்களாக பல காவிய படைப்புகளை தந்தவர்கள் இயக்குனர் பாரதிராஜா மற்றும் அவரது சிஷ்யர் கே பாக்யராஜ். குருநாதர் பாரதிராஜா மறைந்த 17 நாட்களில் அவரது சிஷ்யர் கே பாக்யராஜூம் இந்த மண்ணை விட்டு மறைந்தது தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமாவின் ராஜாக்களாக இருந்த அவர்களது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களுக்கு கோபுரங்கள் நினைவு உற்சவம் என்ற நிகழ்ச்சியை வருகிற 16ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடத்த தமிழ் சினிமாத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சங்கத்தின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியதாவது, பாரதிராஜா கே பாக்யராஜ் இரண்டு பொக்கிஷ கலைஞர்களின் நினைவில் போற்றும் விதமாக ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்ற நினைவு அஞ்சலி நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சி அடைவதற்கு அவர்கள் இருவரது பங்களிப்பு என்னவாக இருந்தது என்பதையும் அவர்களது அடையாளத்தை உணர்த்தும் நிகழ்வாக இந்த உற்சவ விழா நடக்கும்.
பாரதிராஜா உயிரோடு இருந்தபோது அவருக்கு ஒரு பிரமாண்ட விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் தெரிவித்திருந்தோம். அதற்கு ஆலமர வேருக்கு விழுதுகள் எடுக்கும் விழா என்றும் பெயர் வைத்திருந்தோம். திடீரென்று பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அந்த விழா நடக்காமல் போய்விட்டது. அவர் மறைவதற்கு முன்பு இயக்குனர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விருந்து வைத்தார்.
அப்போது கொடைக்கானலுக்கு போகிற வழியில் நான் ஒரு இடம் வாங்கி இருக்கிறேன். அங்கு ஒரு மண்டபம் கட்டப் போகிறேன். அங்கு என்னுடைய படங்கள் படங்களின் பாடல்கள் எல்லாம் வைக்க வேண்டும். அங்கு தான் நான் இருப்பேன். நீங்கள் எல்லாம் அங்கு வந்து எனக்கு உதவி செய்யணும். அது ஐயப்பன் கோவிலுக்கு செல்கிற வழி என்று சொன்னார். மேலும் அந்த இடத்தில்தான் அவரை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் அவரால் மண்டபம் கட்ட முடியவில்லை. அந்த இடத்தில் பாரதிராஜாவுக்கு ஒரு மணிமண்டபம் கட்டலாம் என்று நான் சித்ரா லட்சுமணன் பாக்யராஜ் சார் ராதிகா மேடம் எல்லாரும் உட்கார்ந்து பேசினோம். அவருக்கான ஒரு விழாவை நடத்துவது என முடிவு செய்தோம். ஆனால் ஒரு வாரத்திலேயே பாக்யராஜ் இறந்தது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதை எப்படி பண்ணுவது என்று செய்ய முடியாமல் போய்விட்டது. பார்த்திபன் வந்து பாக்யராஜ் பாரதிராஜா 2 பேருக்குமே சேர்ந்து விழா நடத்தலாம். இது ஒரு நல்ல நிகழ்ச்சியாக எல்லோரும் சேர்ந்து பண்ணலாம் என்று கூறினார். அதனால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார்.





