நடிகர் அஜித்குமார் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இதற்கான வெளியீட்டு தேதி குறிப்பிடபடாமல் தள்ளிப்போனது. இதேபோல் அஜித் குமார் நடித்திருக்கும் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களிலும் அஜித்திற்கு ஜோடியாக திரிஷாவே நடித்துள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களை முடித்திருக்கும் அஜித், கார்பந்தயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். அதன் பிறகு அவர் ஆறு மாதங்கள் ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்குமார் கார் பந்தயங்களில் சிறுவயதிலிருந்தே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதில் சிறு சிறு விபத்துகளிலும் அவர் சிக்கி இருக்கிறார்.
திரைப்படங்களில் பிஸியான பிறகு அவர் கார் பந்தயங்களை விட்டு சற்று விலகியே இருந்தார். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் கார்பந்தயத்தில் களம் இறங்கி இருக்கிறார் அஜித்குமார். துபாயில் வரும் ஒன்பதாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் ஜி டி 3 ரேசில் அவர் கலந்து கொள்கிறார்.
இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பந்தயத்திலும் களம் காண இருக்கிறார் அஜித்குமார். இதற்காக அஜித்குமார் ரேசிங் என்னும் அணியை அவர் உருவாக்கி இருக்கிறார். இதில் அவர் உட்பட நான்கு பேர் இடம்பெற்று இருக்கிறார்கள். இவர்கள் தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துபாய் ரேசிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித்குமார் இன்றும் வழக்கம் போல் அதனை தொடர்ந்தார். அப்போது அவரது கார் திடீரென தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விபத்தில் அஜித்திற்கு காயம் ஏற்படவில்லை என்றும் அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





