தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு சினிமாவில் ஒரு அதிரடி ஆக்சன் ஹீரோவாக பல படங்களில் நடித்து ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். குறிப்பாக பஸ் லாரி ரயிலை எல்லாம் சுண்டுவிரலால் தட்டி விட்டால் அவை எல்லாம் அந்தரத்தில் பறந்து போய்விடும். அப்படி ஒரு ஓவர் பில்டப் காட்சிகளில் நடித்து பெரிய அளவில் புகழ் பெற்றவர் பாலகிருஷ்ணா.
மறைந்த பிரபல நடிகர் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் மகன்தான் நடிகர் பாலகிருஷ்ணா. ஆந்திரா மாநிலம் இந்துப்பூர் தொகுதி எம்எல்ஏவாகவும் இருக்கிறார். இவர் அந்த தொகுதியில் 2014 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்எல்ஏவாக இப்போதும் இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனக்குரிய முக்கியத்துவத்தை ஆந்திரா மாநில அரசு கொடுக்கவில்லை என்கிற ரீதியில் பாலகிருஷ்ணா குற்றச்சாட்டு எழுப்பி பேசியிருந்தார். மேலும் தற்போதைய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அண்ணன் நடிகர் சிரஞ்சீவி பற்றியும் அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ஆந்திரா அரசிடம் அவர் தனக்கு அமைச்சர் பதவி ஒன்றை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் பவன் கல்யாண் தங்களது கட்சி கூட்டணியில் துணைமுதல்வராக இருந்து வருகிறார். அவருக்கு கிடைக்கும் மரியாதை, முக்கியத்துவம் காரணமாக அவர் இதுபோன்று தனக்கு அமைச்சர் பதவி கேட்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் முக்கிய பொறுப்புள்ள துறையை அவர் கேட்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலகிருஷ்ணாவுக்கு சகோதரியின் கணவர் என்பது மட்டுமல்ல, அவருக்கு சம்பந்தியுமாக இருக்கிறார்,. மேலும் சர்ச்சை எதுவும் வெடிக்காத வகையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அமைச்சர் பதவி கொடுப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தகவல் வெளியாகி தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வேகமாக வரும் லாரி பஸ் ரயில் போன்றவற்றை எல்லாம் ஆவேசமாக தூக்கி வீசும் வல்லமை படைத்த நடிகர் பாலகிருஷ்ணா, ஆந்திரா அரசு தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்றால் எதையெல்லாம் தூக்கி வீசுவாரோ என்று ரசிகர்கள் அவரை கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.





