தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. ஏராளமான மாஸ் ஹிட் படங்களை தந்த அவர், கடந்த 2008ம் ஆண்டில் பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார். பிறகு எம்எல்ஏ அமைச்சர் போன்ற பதவிகளை வகித்த அவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசியலை விட்டு முற்றிலும் ஒதுங்கி விட்டார். கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்து வருகிறார். இவரது மகன் ராம்சரண் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி கூறியதாவது, அரசியலில் இருந்து முற்றிலும் விலகி விட்டேன். ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாகவும் தவறான கருத்துக்களுடனும் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால் அரசியல் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியத்தை நான் ஒருபோதும் உணரவில்லை.
நான் செய்த சேவையும் பெற்ற அன்பும், பாசமும் எனக்கு கேடயமாக உள்ளன. நான் செய்த நன்மைகளைப் பற்றி நான் பேச வேண்டியது இல்லை. அவை தானாகவே பேசும். சில அரசியல் தலைவர்களும் என்னை தொடர்ந்து விமர்சிக்கின்றனர். ஒரு அரசியல் தலைவர் எனக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
பின்னர் ஒரு இடத்திற்கு அவர் சென்றபோது அங்கு ஒரு பெண்மணி அவரை உணர்ச்சி பொங்க எதிர்கொண்டு, நீங்கள் ஏன் சிரஞ்சீவியை பற்றி தவறாக பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அந்த வீடியோவை பார்த்து அவரைப் பற்றி நான் விசாரித்து தெரிந்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி ரத்த வங்கி மூலம் அவரது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் அதனால் அவர் என்னை மிகவும் மதிக்கிறேன் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் என் இதயத்தை தொட்டன.
அந்த பெண்மணி அப்படி கேட்ட பிறகு அந்த அரசியல் தலைவர் ஒருபோதும் என்னை பற்றி விமர்சிக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும் இதயம் உண்டு. ஒரு வேளை அவர் கோபத்தில் அப்படி பேசி இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு சென்ற பிறகு அவரது மனைவி கூட இனி அப்படி பேச வேண்டாம் என்று கூறியிருக்கலாம். சமூக வலைதள விமர்சனங்களுக்கு நான் எப்போதும் பதில் அளிப்பதில்லை. ஏனெனில் என் நற்செயல்களும் ரசிகர்களின் அன்பும் எனக்கு பாதுகாப்பாக உள்ளன. நான் செய்தவற்றைப் பற்றி நான் பேச வேண்டியது இல்லை. அவை எனக்காக பேசும் அதுதான் உண்மை என்று நடிகர் சிரஞ்சீவி கூறியிருக்கிறார்.
கடந்த 1998ம் ஆண்டு சிரஞ்சீவி தொண்டு அறக்கட்டளை என்ற அமைப்பை ஆரம்பித்தார் சிரஞ்சீவி. ரத்த வங்கி கண்வங்கி ஆகியவை அந்த அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. அறக்கட்டளையின் இணைய தகவல்படி 9 லட்சம் யூனிட்டுக்கும் அதிகமான ரத்தம் பெறப்பட்டுள்ளதாகவும் அதில் 79 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 4580 ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டு அதன்மூலம் பார்வையற்ற 9060 பேர் பார்வை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவ சேவையில் எந்த ஒரு நடிகரும் இந்த அளவுக்கு மக்களுக்கு சேவை இதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





