விஜய் டிவியில் கடந்த 6ம் தேதி முதல் தமிழ் பிக்பாஸ் சீசன் 10 நடந்து வருகிறது. ஒரு வாரம் பிக்பாஸ் நடந்து முடிந்த நிலையில் 2 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். இந்த வாரத்தில் சனி ஞாயிறு தினங்களில் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வழக்கம் போல போட்டியாளர்களுடன் பேசி அவர்களது குறை நிறைகளை சுட்டிக் காட்டினார்.
அப்போது ஜனநாயகம் என்ற தலைப்பில் இந்த முறை பிக்பாஸ் சீசன் 10 நடந்து வருவதால், அதுகுறித்த தனது கருத்துகளை விஜய் சேதுபதி பேசினார். அப்போது டர்ன்னா என்னன்னே தெரியாம லீடர் ஷிப்புன்னா என்னன்னே தெரியாம வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துட்டு பிரச்னைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப் போட்டுட்டு இல்லே அங்க தெறிச்சு ஓடறதுங்கறது லீடருக்கான குவாலிட்டி இல்லே. அது ஏமாற்றுவேலை என்று ஓபனாக பேசியிருந்தார்.
மேலும் பேசுகையில் போட்டியாளர் முனியம்மாவிடம் பேசும் போது, நீங்க சட்டசபை நிகழ்ச்சி பார்த்து இருக்கீங்களா? எப்பவும் எதிர்கட்சி காரங்க தான் வெளிநடப்பு பண்ணி வெளியே போவாங்க, ஆளுங்கட்சியில் இருந்து யாராவது வெளியே போவாங்களா என்றும் அவர் அப்போது கேட்டிருந்தார்.
இந்த 2 விஷயங்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி, தமிழ்நாட்டு அரசியல் குறித்தோ குறிப்பாக முதல்வர் விஜய் அல்லது தவெக கட்சி குறித்தோ எந்த இடத்திலும் குறிப்பிடாமல் பொதுவாக தான் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். ஆனால் அது மிக சரியாக விஜய்க்கு பொருந்துகிறது.
ஏனென்றால் விஜய் தான், எதிர்கட்சியினர் வெளியே ஓடக்கூடாது என்று சொல்லிட்டு அவர் வெளியே போனார். எனவே ஆளுங்கட்சியில் முதல்வராக இருக்கும் விஜய் வெளியே போனது பேசுபொருளான நிலையில் விஜய் சேதுபதி சொன்ன அந்த கருத்துக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வெளிப்படையான பொதுவான மனிதராக ஜனநாயகம் சார்ந்த தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அது தவெக ஆட்சிக்கும் முதல்வர் விஜய்க்கும் எதிர்மறையான கருத்துகளாக தெரிந்தால், ஜனநாயகம் சார்ந்த ஆட்சியை அவர்கள் நடத்தவில்லை என்பதை அவர்களே உணர்ந்து திருந்த வேண்டும் என்று மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





