தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜீவா. தமிழில் பல வெற்றி படங்களில் ஜீவா நடித்து இருக்கிறார். அவர் நடித்த சிவா மனசுல சக்தி, தெனாவெட்டு, ராம், கற்றது தமிழ், கோ, நண்பன், டிஸ்யூம், சிங்கம் புலி உள்ளிட்ட பல படங்கள் பெரிய வெற்றி படங்களாக இருந்திருக்கின்றன. இதில் சில படங்கள் மிகவும் கவனம் பெற்ற படங்களாகவும் இருந்துள்ளன.
சமீப காலமாக ஜீவா நடித்த படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் நிலையில், அந்த படத்தில் நடிக்க இயக்குனர் ராஜேஷிடம் ஜீவா, 4.5 கோடி ரூபாய் என அதிக சம்பளம் கேட்டதால், படத்தின் இயக்குனர் ராஜேஷ், அந்த படத்தில் வேறொரு ஹீரோவை நடிக்க வைக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரியின் இளைய மகன்தான் ஜீவா, மூத்த மகன் ஜித்தன் ரமேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்.பி. சவுத்ரி அவர் நீண்ட காலமாக நடத்தி வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை மிக விரைவில் நடிகர் ஜீவாவசம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் மிக விரைவில் சினிமா பட தயாரிப்பாளராக பல படங்களை தயாரிக்கும் நடிகராகவும் ஜீவா மாறும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நடிகர் ஜீவா பயணித்த கார் இன்று விபத்தில் சிக்கியது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, நடிகர் ஜீவா இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தனது குடும்பத்தினுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் பஸ் ஸ்டாப் அருகே ஜீவா பயணித்து வந்த கார் விபத்தில் சிக்கியது.
இருசக்கர வாகனம் ஒன்று, காருக்கு குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் நடிகர் ஜீவா உட்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர். எனினும் காரின் முன் பகுதி பயங்கரமாக சேதம் அடைந்துள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஜீவா கார் விபத்து சிக்கியது தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களுக்கு முன் நேஷனல் கிரஷ் நடிகை ராஸ்மிகா மந்தனா விபத்தில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் தற்போது நலமாக இருப்பதாக பதிவு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நடிகர் ஜீவா பயணித்த காரும் விபத்துக்குள்ளானது பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





