கொகைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், தமிழ் சினிமா நடிகர் ஸ்ரீகாந்த் 2 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறைக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடன் நெருக்கமாக பழகிய நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப் பொருள் தந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து போலீசார் நடிகர் கிருஷ்ணாவுக்கு, சென்னையில் உள்ள அவரது வீட்டு முகவரிக்கு சம்மன் அனுப்பினர். போலீசார் போனில் தொடர்பு கொண்ட போது அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாக தகவல் தெரிய வந்தது. அதனால் சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று கிருஷ்ணாவை அழைத்து வந்தனர்.
அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசருக்கு ஏற்பட்ட நிலையில் சென்னைக்கு அவர் வரவழைக்கப்பட்டார். சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர். அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா அல்லது போதைப்பொருள் விற்பனை செய்பவர்களிடம் இவருக்கு தொடர்பு இருந்ததா என்ற அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில் தான் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடிகர் கிருஷ்ணாவிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, நான் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்துவதில்லை. எனக்கு இரைப்பையில் பிரச்னை இருப்பதால் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும் எனக்கு வழக்கத்தைவிட வேகமான இதயத்துடிப்பு இருந்து வருகிறது. அதற்காகவும் நான் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை. அதற்கான வாய்ப்பு இல்லை. என் மீது தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று போலீசாரிடம் அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் நேற்று இரவு முழுவதும் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். 16 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடந்த நிலையில் கிருஷ்ணா வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருக்கின்றனர். இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி நடிகர் கிருஷ்ணாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதை பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.





