நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 2வது மகன் நடிகர் பிரபு. இவரை இளையதிலகம் பிரபு என சினிமாவில் அழைப்பதுண்டு. சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் பிரபு, பல படங்களை தயாரித்து இருக்கிறார். ஷங்கர் இயக்கிய ஐ படத்தில், விளம்பர நிறுவனம் நடத்தும் தொழிலதிபராக ராம்குமார் அட்டகாசமாக நடித்திருப்பார்.
நடிகர்களின் வாரிசுகளாக தமிழ் சினிமாவில் வரும் ஒரு சிலர் தவிர, பலரும் நிலைத்து நிற்பதில்லை. ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசாக தமிழ் சினிமாவில் காலடி பதித்த பிரபு, பல வெற்றிப் படங்களை தந்தவர். இன்று வரை சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரும் மகன் விக்ரம் பிரபுவும், கும்கி படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
பிரபு நடித்த படங்களில் சின்னதம்பி, அவரது சினிமா பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது. ரஜினி, கமல், சத்யராஜ் ஆகியோருடன் பல படங்களில் நடித்தவர் பிரபு, ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், சந்திரமுகி, கமலுடன் வெற்றி விழா, சத்யராஜூடன் சின்ன தம்பி பெரியதம்பி, அண்ணா நகர் முதல் தெரு, சிவசக்தி என இவர்கள் காம்பினேஷனில் அவை வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன.
சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பிரபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவை எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். எனக்கு அதிர்ஷ்டமான ஊர். நான் நடித்த பல வெற்றிப் படங்கள் எடுக்கப்பட்டது கோவையில்தான். கோவையை சுற்றியுள்ள ஆனைமலை, பொள்ளாச்சி, சேத்துமடை, உடுமலை, சிறுவாணி போன்ற பகுதிகளில்தான் அந்த படங்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
கோவைக்கு அப்பா சிவாஜி கணேசன் அதிகமுறை வந்திருக்கிறார். திருமணங்கள் உள்ளிட்ட நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறார். கோவையில், அவரது போட்டோவை பல வீடுகளில் நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். என் அப்பாவின் மீதும், என் மீதும் கோவை மக்களுக்கு பிரியம் அதிகம். கோவைக்கு நான் வந்து, நான் அவர்கள் வீட்டுக்கு போகாவிட்டாலும், அவர்கள் வீடுகளில் இருந்து கேரியர்களில் எனக்கு சாப்பாடு வந்துவிடும். அந்தளவுக்கு என் மீது பாசம் கொண்டவர்கள் கோவை மக்கள்.
சந்திரமுகி 2 போல, குரு சிஷ்யன் 2ம் பாகம் எடுத்தாலும் நன்றாக தான் இருக்கும். ஆனால் அந்த படத்தில் என் மகன் விக்ரம் பிரபுவும், கார்த்திக் மகன் கௌதமும் நடித்தால் சிறப்பாக இருக்கும். கண்டிப்பாக அவர்கள்தான் நடிக்க வேண்டும். அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை, என்னிடம் கேட்டு விட்டீர்கள், என்று சிரித்தபடி கூறினார் நடிகர் பிரபு.





