கடந்த 10 ஆண்டுகளாக, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. ஆக்சன், லத்தி சார்ஜ் என எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் படுமோசமான பிளாப் படங்களாக அமைந்தன. விஷால் ரசிகர்களே கூட விஷால் படத்தை பார்க்க தயங்கும் அளவுக்கு மொக்கையான அவரது படங்கள் பெரிய ஏமாற்றத்தை தந்தன.
இந்த சூழலில்தான், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி, நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது. இந்தி வெர்சனிலும் மார்க் ஆண்டனி படம் வெளியானது. அங்கும் மார்க் ஆண்டனி படம் வெற்றியை கொடுத்தது.
ஆனால் மார்க் ஆண்டனி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம், அதில் நடித்த நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான். அவரது நடிப்பை காண தான் ரசிகர்கள், தியேட்டர்களுக்கு படை எடுத்தனர். பொம்பள ஷோக்கு கேக்குதாடா, பொம்பள ஷோக்கு, கேங்ஸ்டர்ன்னா ஒரு டிசிப்ளின் வேணாமா என்ற கேட்டபடி துப்பாக்கியால் சுடும் எஸ்ஜே சூர்யா, வேற லெவலில் இருந்தது.
மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு, இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படம், மிகப்பெரிய பிளாப் படமாக இருந்தது. இதில் நாயகியாக நடித்த பிரியா பவானி ஷங்கரை பிரமோ நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க விடாமல், நடிகர் விஷால் நடித்தார். அவரை ராசியில்லாத நடிகை என்று விமர்சித்தார் போன்ற சர்ச்சைகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகர் விஷால் நடித்த படம் மதகஜ ராஜா 11 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஷால், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி மற்றும் சந்தானம், சடகோபன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த 2013ம் ஆண்டில் உருவானது.
ஆனால் 11 ஆண்டுகளாகியும் இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த படத்தின் இயக்குனர், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சுந்தர் சி என்பது குறிப்பிடத்தக்கது. மதகஜ ராஜா படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திடம் பலமுறை போராடி கேட்டும், இந்த படத்தை நாங்களே வெளியிடுகிறோம் என்று நானும் விஷாலும் பலமுறை சொல்லியும், கெஞ்சியும் கூட அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்று சுந்தர் சி ஏற்கனவே ஒருமுறை கூறியிருந்தார். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் மதகஜ ராஜா வெளியாகும் என்றும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.





