தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதிலும் ஹீரோவாக நடித்து அசத்திக்கொண்டு இருக்கிறார். கடந்தாண்டில் லால் சலாம் வேட்டையன் படங்களில் நடித்திருந்த ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி கலந்துக்கொள்ள இருக்கிறார். வருகிற மார்ச் மாதம் அந்த படப்பிடிப்பு துவங்க உள்ளது. தொடர்ந்து 13 மாதங்கள் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 படத்தை தயாரிக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 170 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் எந்த படத்தின் 2ம் பாகத்திலும் ரஜினி நடித்தது இல்லை. மாஸ் ஹிட் படமான சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக சந்திரமுகி 2ம் பாகம் உருவான போது கூட ரஜினிக்கு பதிலாக அதில் ராகவா லாரன்ஸ்தான் நடித்தார். ரஜினி முதன்முறையாக ஜெயிலர் 2ம் பாகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் 1975ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2025ம் ஆண்டில் அவரது தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து இப்போது பொன்விழா ஆண்டில் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த மாதத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான தளபதி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படம் 1990களில் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது. ரி ரிலீஸ் செய்யப்பட்ட போதும் தளபதி படத்துக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
அதே போல், ரஜினியின் பொன்விழா ஆண்டில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது இயக்கத்தில் முத்து படையப்பா என்ற 2 படங்களில் ரஜினி நடித்துள்ளார். இந்த 2 படங்களுமே மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. தற்போது ரஜினியின் 50வது சினிமா ஆண்டில் படையப்பா படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் அறிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





