சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிக்குமார். இந்த படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிகர் ஜெய் நடித்திருந்தார். இந்த படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியும் அறிமுகமாகி வில்லன் நடிப்பில் மிரட்டியிருந்தார்.
இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிகர் சசிக்குமார் நடித்த படம் நாடோடிகள். இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது. காதலர்களுக்கு உதவும் நண்பர்களின் கதை. மிகவும் யதார்த்தமான கதை திரைக்கதையில் இந்த படத்தை சமுத்திரக்கனி தந்திருந்தார்.
தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த சசிக்குமார் ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை தந்தார். அவர் இயக்குனர் நடிகராக மட்டுமின்றி அவரே திரைப்படங்களையும் தயாரித்த நிலையில் ஒரு கட்டத்தில் நிறைய கடன்களை வாங்கி படம் எடுத்த நிலையில், படங்கள் ஓடாததால் கடனாளியாகவும் மாறினார்.
இதுபோன்ற சூழலில் சசிக்குமார் ஹீரோவாக நடித்த பல படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகி சசிக்குமார் படம் என்றாலே நன்றாக இருக்காது என்ற ஒரு சூழலும் உருவானது. அதே நேரத்தில் குட்டிப்புலி சுந்தரபாண்டியன் அயோத்தி போன்ற அவரது படங்களும் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சசிகுமார் வதந்தி 2 என்ற வெப் தொடர் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சசிக்குமார் கூறியதாவது, கடன் சுமையால் தான் இயக்குனர் கனவை தள்ளிப் போட்டேன்.
பணத் தேவைக்காக பிடிக்காத கதைகளிலும் நான் நடித்தேன். கதை கேட்கும் போதே சில படங்கள் ஓடாதுன்னு தெரிந்தும் கடனை அடைக்க வேறு வழியில்லாமல் அந்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தயாரிப்பாளர்களிடம் முடிந்த அளவு சொல்லிப் பார்த்தேன். அவர்கள் ஏற்காத சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் அந்த படங்களில் நான் நடிக்க நேரிட்டது என்று நடிகர் சசிகுமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





