நடிகர் சிவகார்த்திகேயன் தனது அபார திறமையால், உழைப்பால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற நடிகராக தமிழ் சினிமாவில் முன்னேறி இருக்கிறார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அவர் நடிகராக அறிமுகமான மெரினா படத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 10 ஆயிரம். இப்போது அவர் வாங்குகிற சம்பளம் ரூ. 55 கோடி என்று சொல்லப்படுகிறது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்கள் 22 என்ற நிலையில், கடைசியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படம், சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் பெரிய திருப்புமுனை படமாக அமைந்துவிட்டது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்துக்கு பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே நடித்த 23வது படம் வெளியாக உள்ளது. அதன்பிறகு டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு பாஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 4 மாதங்களுக்கு பின்புதான் இந்த படம் ஷூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படம், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிறது. இதில் ஸ்ரீ லீலா, ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். ஷூட்டிங் துவங்கிய நிலையில், சிவகார்த்திகேயன் அந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார். இதற்கிடையே ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், உடல் எடை, டயட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கூறுகையில், உடல் எடையை அதிகரிப்பது, குறைப்பது என்றால் அது நடிகர் விக்ரம் சார்தான் எக்ஸ்பர்ட். அவர் எப்போதுமே டயட்டில்தான் இருப்பார் என்று சொல்வார்கள். அவர்கிட்ட டயட் பற்றி மட்டும் கேட்கக் கூடாது.
அவர்கிட்ட டயட் பற்றி கேட்டால் கண்டிப்பா நாம் மாட்டிக்கிவோம். என்னதான் டயட்டில் இருந்தாலும் அப்பப்போ போய் பிரியாணியை கொஞ்சமா டச் பண்ணிட்டு வருகிற ஆள் நான். என்றாலும் எதையும் அதிகமாக சாப்பிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். அமரன் படத்தில் நடித்த போது டயட்டில் அதிகமான கவனம் செலுத்தினேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.





