வாழ்க்கை பயணத்தை மேடு பள்ளங்களை போன்றது என ஒப்பிடுவார்கள். வெற்றி தோல்விகள் மாறி மாறி வரும் என்பதை தான் அப்படி சொல்வார்கள். அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தவர் நடிகர் சூர்யா.
சரியாக 12 ஆண்டுகளில் அவர் நடிப்பில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன. நேரடியாக தியேட்டரில் ரிலீஸான 10 படங்கள் தொடர்ந்து தோல்வியை தந்து சூர்யாவை மிகப்பெரிய ஏமாற்றத்தில் தள்ளியது.
சிங்கம் 3 பசங்க 2 என்ஜிகே 24 காப்பான் அஞ்சான் மாசு என்கிற மாசிலாமணி தானா சேர்ந்த கூட்டம் எதற்கும் துணிந்தவன் கங்குவா என அவரது 10 படங்களும் படுதோல்வியை சந்தித்தன. அதுவும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா படம் மிக மோசமான எதிர்விமர்சனங்களையும் பலத்த நஷ்டத்தையும் சந்தித்தது.
ஆனால் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறாத போதிலும் நஷ்டம் இல்லாமல் தப்பித்தது. அதன்பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 340 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
நடிகர் சூர்யா இதுவரை நடித்த படங்களில் ரூ. 200 கோடி வசூலை கடந்த முதல் படமும் இதுதான். ரூ. 340 கோடி என்ற மிகப்பெரிய வசூலை எட்டியதும் இந்த படம்தான். அதன் தொடர்ச்சியாக இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா மமிதா பைஜூ ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் கடந்த 14ம் தேதி வெளியானது.
இந்த படத்துக்கும் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் ரசிகர்களிடம் கிடைத்து வரும் நிலையில் இந்த படம் 9 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. சூர்யா நடிப்பில் கருப்பு படத்தை தொடர்ந்து இந்த படமும் ரூ. 200 கோடி வசூலை கடந்து வெற்றி நடை போடுகிறது. அடுத்து ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து அடுத்து வெளிவரும் அவரது 47வது படமும் இதே போல் வெற்றி பெற்றால் இந்த ஆண்டில் ரூ. 200 கோடிகளை கடந்த 3வது படமாக ஹாட்ரிக் வசூல் சாதனை என்ற பெருமை சூர்யாவுக்கு கிடைத்து விடும்.





