2025 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரைக்கும் வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் குவித்த திரைப்படமாக அவதாரம் எடுத்திருக்கிறது டிராகன். வெறும் 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அர்ச்சனா இதனை தயாரித்திருந்தார்.
லவ் டுடே வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து இதில் இயக்கத்தை கைவிட்டு நாயகனாக களம் இறங்கினார் பிரதீப் ரங்கநாதன். இதுபோக இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார் கௌதம் மேனன் மிஸ்கின் ஆகியோரும் நடித்திருந்தனர். நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் உள்ளிட்டோரும் இடம் பெற்று இருந்தனர்.
தற்போது வரை டிராகன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராங்கான கன்டென்ட் தான். கதையில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல், சரியான பாதையை தேர்வு செய்து சூப்பராக சொல்லி இருந்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து.
கல்விதான் எல்லாம் என்பதை இரண்டாம் பாதியில் நகைச்சுவை ததும்ப அவர் விளக்கி இருந்தார். படத்தில் எந்த ஒரு காட்சியும் அன்வாண்டடாக இல்லை என்றே கூறலாம். அந்த அளவுக்கு, ரத்தினச் சுருக்கமாக எடுக்கப்பட்டிருந்த டிராகன் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
டிராகன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான போதும், திரையரங்குகளில் அது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தை பார்த்து விட்ட ரஜினிகாந்த், டிராகன் குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது இந்த பட்டியலில் தளபதி விஜய்யும் சேர்ந்து இருக்கிறார். இந்த சந்திப்பு குறித்து அஸ்வந்த் மாரிமுத்து நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
நான் முழு தகுதியுடன் அவரை சந்திப்பதற்கு எப்படி எல்லாம் உழைத்தேன் என்பது என் உடன் இருந்தவர்களுக்கு தெரியும். அவருடன் சேர்ந்து பணியாற்றுவேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சந்தித்து விட்டேன். நான் அவரைப் பார்த்து என்ன பேசப்போகிறேன் என்று எனது குழுவினர் காத்திருந்தனர். அவர் என்னை உற்று நோக்கும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதையெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. என்னிடம் கிரேட் ரைட்டிங் ப்ரோ என்று அவர் கூறினார். இது போதும் என்று அஸ்வந்த் மாரிமுத்து பதிவிட்டுள்ளார்.





