நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பு கலைஞராக வலம் வருபவர். நடிகர் கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் பல எல்லைகளை தொட்டுக்கொண்டு இருப்பவர். சேது படம் துவங்கி, தங்கலான் படம் வரை அவரது நடிப்பு வெவ்வேறு லெவலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சேது, காசி, அந்நியன், ராவணன், பிதாமகன், ஐ போன்ற படங்களில் விக்ரம் நடிப்பு அதகளமாக இருக்கும். நடிகர் கமலை போல, கேரக்டருக்காக தன் உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் விக்ரம் முதன்மையானவர். சாமி படம்தான் அவரது கேரியரில் கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வரும் 15ம் தேதி விக்ரம் நடித்த தங்கலான் படம் ரிலீஸாகிறது. சினிமா ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள தங்கலான் படம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தங்கச் சுரங்கத்தில் பணிசெய்த அடிமை மக்களின் வாழ்க்கை பற்றியது.
தங்கலான் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கடந்த வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில், தங்கலான் படக்குழு, தொடர்ந்து பிரமோசன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி என குறிப்பிட்ட நகரங்களுக்கு படக்குழு சென்று ரசிகர்களை சந்தித்து படத்தை பிரமோ செய்கிறது.
இந்நிலையில், தங்கலான் படத்தின் ஹீரோ சியான் விக்ரம், செய்தியாளர்களை பிரமோ நிகழ்ச்சிகளின் போது சந்தித்து பேசி வருகிறார். அப்போது கமலுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிகராக இருந்தும் விஜய், அஜீத்குமார், சூர்யா போல உங்களுக்கு என தனியாக பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லையே என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. மிகவும் டென்சன் செய்த இந்த கேள்வி விக்ரமை சற்று அப்செட் செய்தது.
பிறகு அதற்கு பதிலளித்து நடிகர் விக்ரம் பேசுகையில், தியேட்டர்களில் என் ரசிகர் பட்டாளத்தை நீங்கள் பார்க்கலாம். எனக்கு என தனியாக இருக்கும் ரசிகர்களை விட, பொதுவான ரசிகர்களும் எனக்கு பெரிய அளவில் உள்ளனர். டாப் நடிகர்களுக்கு ஹேட்டர்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது. எனக்கு அப்படி யாரும் ஹேட்டர்ஸ் இல்லை. சாமி, தூள் படங்களை கமர்ஷியல் ஹிட் படங்களை தந்த போதே, நான் டாப் லெவலுக்கு வந்துவிட்டேன். தொடர்ந்து சினிமாவில் மாற்று முயற்சிகளை செய்து வருகிறேன். அதன் பலனாக தான் தங்கலான் உருவாகி உள்ளது, என்றார்.





