தமிழ் சினிமா வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்து வருபவர்கள் தயாரிப்பாளர்கள்தான். பல நூறு கோடிகளில் முதலீடு செய்து பெரிய பட்ஜெட் படங்களை அவர்கள் தயாரிக்க முன்வருவதால்தால், 100 கோடி, 200 கோடி ரூபாய் என நடிகர்கள் சம்பளத்தை உயர்த்திக்கொண்டு படங்களில் நடிக்கின்றனர். சொகுசாக ராஜபோக வாழ்க்கை நடத்துகின்றனர்.
எவ்வளவு உயரத்துக்கும் போனாலும், தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடிகர்கள் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்ததால்தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள், தங்களது வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும் தயாரிப்பாளர்களை மரியாதையாக நடத்துகின்றனர். அவர்களுக்கு பிரச்னை ஏற்படாதபடி படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் படத்தை முடித்து கொடுக்கின்றனர்.
ஆனால் ஒரு சில நடிகர்கள் தயாரிப்பாளர்களை அலட்சியப்படுத்துகின்றனர். அட்வான்ஸ் ஆக பல கோடிகளை வாங்கிக்கொண்டு அவர்களை கால்ஷீட் தேதி தருவதில்லை. அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி தருவதில்லை. இதனால் பல கோடிகளை சினிமா பைனான்ஸியர்களிடம் வட்டிக்கு வாங்கி சினிமாவில் முதலீடு செய்யும் சில தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாமல், படத்தையும் தயாரிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
இதன்காரணமாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முக்கிய முடிவுகளின் அடிப்படையில் வருகிற 16ம் தேதி முதல், புதிய படங்கள் பூஜை போடப்படுவதில்லை, அதே போல் நவம்பர் 1ம் தேதி முதல் எந்த படங்களின் படப்பிடிப்பும் நடக்காது, படப்பிடிப்பு சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் சினிமா சார்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, இது மாதாமாதம் நடத்தப்படும் செயற்குழு கூட்டம்தான் என்றனர்.
மேலும், படப்பிடிப்பை நிறுத்துவது தொடர்பாக அதை அறிவித்த தயாரிப்பாளர் சங்கத்திடம்தான் கேட்க வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம். அவர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். விஷால், தனுஷ் போன்றவர்களுக்கு ரெட்கார்டு கொடுக்கும் அளவுக்கு தயாரிப்பாளர் சங்கம் போனதற்கு காரணமே, நடிகர் சங்கம் காட்டிய அலட்சியம்தான் என பலரும் கூறி வரும் நிலையில், எந்த பிரச்னையும் இல்லை என்று நடிகர் சங்கம் கூறியிருப்பதை ரசிகர்கள், வடிவேலு பாணியில், எங்கள வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே என கலாய்த்து வருகின்றனர்.





