திரைப்பட இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் தமிழில் செம்பருத்தி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. முதல் படத்திலேயே தனது வசீகரமான அழகால் நடிப்பால் ரசிகர்களின் மனங்களை வென்ற ரோஜா தொடர்ந்து பல படங்களில் நடித்து கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் ரஜினியுடன் உழைப்பாளி வீரா போன்ற படங்களில் நடிகை ரோஜா நடித்தார். விஜயகாந்த் பிரபு கார்த்திக் பிரபுதேவா சத்யராஜ் அர்ஜூன் சரத்குமார் முரளி என அன்றைய காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் கதாநாயகியாக ரோஜா நடித்திருக்கிறார்.
இதற்கிடையே இயக்குனர் ஆர்கே செல்வமணியை ரோஜா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆந்திரா அரசியலில் தீவிரம் காட்டிய நடிகை ரோஜா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் எம்எல்ஏ மற்றும் அமைச்சராகவும் இருந்தார்.
ஆனால் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் ஆந்திரா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தர தயாராகி வருகிறார். ஒரு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகை ரோஜா இப்போது நடித்து வருகிறார். மீண்டும் தமிழ் சினிமாவில் ரோஜா படங்களில் நடிப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, ரஜினிக்கு ஜோடியாக நான் நடித்த உழைப்பாளி எனக்கு 3வது படம். படப்பிடிப்பு தளத்துக்கு முதல் நாள் நான் போனபோது அங்கே ரஜினி சார் மட்டும்தான் தெரிஞ்ச முகமாக இருந்தார். அவரிடம் படத்தில் கதாநாயகியாக நடிக்க வந்திருக்கேன். டைரக்டர் பி வாசு சார் இதுல யாருன்னு அவர்கிட்ட கேட்டேன்.
நான் அப்படி கேட்டதும் அவர் விழுந்து விழுந்து சிரித்தார். டைரக்டரை அழைச்சிட்டு வந்து, என்ன வாசு ரோஜா தான் வேணும்னு நீங்க சொன்னீங்க. சரி உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு என்று நினைத்தேன். ஆனா அந்த பொண்ணுக்கு உங்களை யாருன்னே தெரியலையேன்னு என்னை வைத்து டைரக்டரை ரஜினி கிண்டல் பண்ணினார் என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





