நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி எடுத்து வருகிறார்.
இதில் த்ரிஷா அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான விஷயங்கள் இருக்க படம் குறித்த எந்த ஒரு தகவலையும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிடாமலேயே இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதோடு சரி, படம் குறித்த எந்த ஒரு விஷயத்தையும் அந்த நிறுவனம் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. படத்தில் அஜித்தை தவிர மற்ற நடிகர்கள் நடிப்பது அனைத்துமே சூட்டிங் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது.
ரசிகர்களும் இப்போது வரும் அப்போது வரும் என படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்தனர். ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதற்கு எதற்கும் தலை சாய்க்கவில்லை. ஏகே ரசிகர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் விட்டு விட்டனர். ஏற்கனவே அவர்களுக்கு வலிமை திரைப்படத்தில் பட்ட அனுபவம் கண்ணில் தென்பட்டதால் அடுத்த கட்டத்திற்கு அவர்கள் செல்லவில்லை.
இப்படியான சூழலில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவே இல்லை.
இந்த நிலையில், அஜித்தின் 63 வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த டைட்டிலால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜூன் மாதம் இதன் படபிடிப்பு தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





