சினிமாவில் நடிப்பதை காட்டிலும் கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபில் சுடுதல் என விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அஜீத்குமார். கடந்தாண்டு முழுவதும் அவர் வெளிநாடுகளில் நடந்த கார் ரேஸ்க்காகவே தனது 12 மாதங்களையும் ஒதுக்கி விட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
அதன்பிறகு இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர்த தனது 64வது படத்தில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் கேட்கும் ரூ. 185 கோடி சம்பளத்தை தர எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அதனால் அந்த படம் துவங்குவதே கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இந்த சூழலில், நடிகர் அஜீத்குமார் பங்கேற்ற கார் ரேஸ் போட்டிகளை எல்லாம் இயக்குனர் ஏஎல் விஜய் ஒரு டாகுமென்ட்ரி படமாக சில மாதங்களாக எடுத்து வருகிறார். இதற்காக அவர் துபாய் ஸ்பெயின் இத்தாலி என பல நாடுகளில் நடிகர் அஜீத்குமாருடன் இருந்து அவரது கார் ரேஸ் பயணங்களை எல்லாம் படம் பிடித்துள்ளார்.
இப்போது அந்த கார் ரேஸ் போட்டிகளின் தொகுப்பை டாகுமென்ட்ரி படமாக இல்லாமல் ஒரு திரைப்படமாக கொண்டு வரும் முயற்சி நடந்து வருகிறது. இதை முதலில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்ட நிலையில் நேரடியாக சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். தியேட்டரில் இது வெளியான பிறகு 4 வாரங்கள் அல்லது 8 வாரங்களில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இது டாகுமென்ட்ரி படமாக இல்லாமல் ஒரு சினிமா படம் போலவே உருவாகிறது. இதற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் கார் ரேஸில் நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்த நடிகர்கள் சிம்பு சிபிராஜ் சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா இயக்குனர்கள் வெங்கட்பிரபு விக்னேஷ் சிவன் போன்றவர்களும் இந்த படத்தில் வர உள்ளனர்.
அவர்கள் நடிகர் அஜீத்குமார் குறித்து பேசிய பேட்டிகளும் அவர்கள் அஜீத் கார் ரேஸை கேலரியில் அமர்ந்து பார்த்து காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற உள்ளது. மொத்தத்தில் இது ஒரு கார் ரேஸ் படமாக மட்டுமின்றி, தனது ரசிகர்கள் மத்தியில் கார் ரேஸ் குறித்த ஆர்வத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு படமாகவும் உருவாக்க அஜீத்குமார் திட்டமிட்டுள்ளார்.





