தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. துவக்கத்தில் வல்லவன், மன்மதன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நடிகர் சிலம்பரசன், இடையே சரியாக படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டார்.
குறிப்பாக ஷூட்டிங் சரியாக வராமல் தவிர்ப்பது, தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்டு வம்பு செய்வது என்று சிம்பு மீது பல புகார்கள் எழுந்தன. மேலும் நடிகையின் நயன்தாராவுடன் காதல் வசப்பட்ட சிம்பு, அவர்களுக்குள் காதல் பிரேக்கப் ஆனதன் காரணமாகவும் சினிமாவில் போதிய ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
ஆனால் இப்போது மீண்டும் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் பத்துதல படம் ஏமாற்றம் தந்தது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைப் படத்தில் சிலம்பரசன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த படத்தைத் தொடர்ந்து சிம்பு தனது 49வது படத்தில் நடிக்கிறார். ஓ மை கடவுளே, டிராகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. டிராகன் படம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே, அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவிடம் கதை சொல்லி ஓகே செய்து விட்டார்.
ஆனால் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படமும், அதேபோல் சிம்புவுக்கு தக்லைப் படமும் இருந்ததால் இருவரும் பிசியாக இருந்தனர். இப்போது 2 படங்களையும் முடித்துவிட்டு அவர்கள் மீண்டும் இணைகின்றனர். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தான் துவங்க உள்ளது. இப்போது டிராகன் படத்தின் ஷூட்டிங் இன்னும் 15 நாட்கள் ஹைதராபாத்தில் நடக்க உள்ளதால், அதைத் தொடர்ந்து சிம்பு 49 படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகளை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மேற்கொள்ள இருக்கிறார்.
வழக்கமாக சிம்பு படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பார். ஆனால் இந்த முறை அனிருத் இசையமைக்கிறார். அனிருத் இந்த முறை என் படத்துக்கு இசையமைக்கட்டும் என்று சிம்புவே கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. சிம்பு படம் என்றாலே கண்டிப்பாக அவர் சொந்த குரலில் பாடுவர். இதுவரை யுவன் சங்கர் ராஜா இசையில் பாடிய சிம்பு, இந்த முறை அனிருத் இசையில் பாடினால் அது வேற லெவல்தான் என்று சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





