இந்திய அளவில் ஐகான் ஸ்டாராக, புஷ்பா புஷ்பா 2 படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றியால் கொண்டாடப்படும் நட்சத்திர நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். ஜவான் படத்துக்கு பிறகு அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பே அட்லியை கமிட் செய்தது.
ஆனால் இயக்குனர் அட்லி சொன்ன பிரமாண்டமான பட்ஜெட் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை யோசிக்க வைத்தது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் அட்லி இயக்கும் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒருகட்டத்தில் வேண்டாம் என்று முடிவு செய்தது. இதுகுறித்த பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின், அட்லி இயக்கும் படத்தை தயாரிப்பதில்லை என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் பின்வாங்கி விட்டது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், இயக்குனர் அட்லி இருவரும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்த போது, தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூவை, அட்லிக்கு சிபாரிசு செய்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே அவர் இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் பிளாப் ஆன நிலையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளார்.
அதே நேரத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இருப்பதால், அட்லி இயக்கும் தனது படத்தை தில் ராஜூ தயாரிக்க அவர் ஆசைப்பட்டு இருக்கிறார். இதையடுத்து இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரது சந்திப்பு சமீபத்தில் நடந்திருக்கிறது.
அப்போது இந்த படத்தை டைரக்சன் செய்ய தயாரிப்பாளர் தில் ராஜூவிடம்
ரூ. 100 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி. ஆனால் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை அட்லி இயக்கிய போது அவரது சம்பளம் ரூ. 55 கோடியாக இருந்த நிலையில், அந்த படம் ரூ. 1150 கோடி வரை வசூல் செய்ததால் தனது சம்பளத்தை ரூ. 100 கோடியாக அட்லி உயர்த்தி இருக்கிறார்.
ஆனால் படத்தின் பட்ஜெட் போலவே இயக்குனர் அட்லி சம்பளமும் மிக அதிகமாக இருப்பதால், தில் ராஜூ பலத்த யோசனையில் இருக்கிறார். வருகுிற ஏப்ரல் 8ம் தேதி நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்த நாள். அன்று இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 100 கோடி அட்லி சம்பளம் கேட்பதால் இந்த படத்தை தில் ராஜூ தயாரிப்பாரா, அல்லது வேண்டாம் என்று நிராகரிப்பாரா என்பதற்கும் பதில் வரும் ஏப்ரல் 8ம் தேதி தெரிந்து விடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.





