வாழை திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் அடுத்ததாக பைசன் காளமாடன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். கர்ணன் திரைப்படத்திற்கு பிறகே இந்த கூட்டணி இணைவதாகத்தான் இருந்தது. பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதனை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த சமயத்தில் மாமன்னன் திரைப்படத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்ததால், பைசனை ஒத்தி வைத்தார் மாரி செல்வராஜ். பிறகு மாமன்னனை முடித்துவிட்டு கிடைத்த சிறு இடைவெளியில், அவர் வாழை திரைப்படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. மாரி செல்வராஜை அடுத்த தளத்திற்கும் அழைத்துச் சென்றன.
இப்படியான சூழலில்தான் துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் கூட்டணி இணைந்து பணியாற்ற தொடங்கியது. இந்தத் திரைப்படத்தின் பூஜை திருநெல்வேலியில் நடைபெற அதில் விக்ரம் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு முழு வீச்சாக நடைபெற்றது. இதில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்த மலையாள நடிகர் லால் இதிலும் இடம் பெற்றிருக்கிறார். பசுபதி, கலையரசன், அழகம்பெருமாள், அருவி மதன் என மிகப் பெரிய கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்து இருக்கிறது. கபடி விளையாட்டை மையப்படுத்தியே இந்த திரைப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார் மாரி செல்வராஜ்.
இதற்காக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கபடி விளையாட்டில் முழு வீச்சாக பயிற்சி பெற்றார் துருவ் விக்ரம். தூத்துக்குடி மாவட்டம் மனத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஆகச் சிறந்த கபடி வீரர். அவரது வாழ்க்கையை தழுவி தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இதன் தமிழக வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படியான சூழலில் பைசன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் பைசன் திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





