தமிழக அரசியல் வரலாற்றில் அப்பழுக்கற்ற ஒரு நேர்மையாளராக வாழ்ந்து காட்டியவர் தோழர் நல்லக்கண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர். சாதாரண கவுன்சிலர் கூட ஸ்கார்பியோ காரில் செல்லும் இன்றைய அரசியல் சூழலில் எளிமையான மனிதராக அரசு தந்த வீட்டில் வசித்தவர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறைந்த ஒரு எளிமையான மனிதர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோழர் நல்லக்கண்ணு நேற்று முன்தினம் மறைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைப்பட நடிகர்கள் பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் போன்றவர்களும் நேரில் வந்து மலரஞ்சலி செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஓமந்தூராரர் காமராஜர் கக்கன் போன்றவர்களை நான் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர்களை எல்லாம் நான் தோழர் நல்லக்கண்ணு வடிவில் பார்த்தேன். எளிமை உண்மையாக வாழ்ந்தால் எல்லா புகழும் தேடி வரும் என்பதற்கு அவரே சிறந்த உதாரணம். பெரிய ஆத்மா அவர். வீர வணக்கம் என்று கூறினார்.
இந்நிலையில் அஞ்சலி கூட்டத்தில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் அருகில் வந்து அமர்ந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அவரது தம்பி சுதீஷ் இருவரும் ரஜினியிடம் தானாக வந்து பேசினர். அப்போது கமலுடன் நீங்கள் நடிக்கும் பிரமோ பார்த்தோம். சூப்பராக இருந்தது. அதிலும் நீங்கள் கண்ணாடியை ஸ்டைலாக கழட்டி போட்ட விதம் அருமை என்றனர்.
அந்த இடத்தில் அந்த சூழலில் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல நெளிந்த ரஜினிகாந்த் பதில் எதுவும் சொல்லாமல் சரி சரி என ஆமோதிக்கவே செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ப்ளு சட்டை மாறன், தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, 100 வயதை தாண்டிய ஒரு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிற இடத்தில் இதெல்லாம் பேச வேண்டிய அவசியமான பேச்சா?
நிஜமாகவே நல்லக்கண்ணு ஐயா மேல இருக்கிற மரியாதையில் அங்கே போனீங்களா? இல்லே… மீடியா போகஸ் கிடைக்கணும்னு போனீங்களா? பிரேமலதா சுதீஷ் உங்களுக்கு கொஞ்சமாவது வெட்கமா இல்லையா? என்று ப்ளு சட்டை மாறன் அந்த பதிவில் காட்டமாக கூறியிருக்கிறார். எந்த இடத்தில் எதை பேச வேண்டும் என்ற நாகரீகம் கூட இவர்களுக்கு இல்லையா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





