சினிமாவில் கொடூர வில்லன்களாக நடித்து, ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட நடிகர்கள் பல பேர் உண்டு. குறிப்பாக பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார், மிகச்சிறந்த மனிதர். சிறந்த பண்பாளர். மது புகை போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். ஆண்டுதோறும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர். குருசாமி என்றுதான் அவரை பலரும் அழைப்பது வழக்கம்.
ஆனால் எம்ஜிஆருக்கு தொடர்ந்து வில்லனாக நடித்த அவரை பலரும் மிக மோசமான மனிதராக பாவித்து விட்டனர். ஒருமுறை ஒரு கிராமத்தில் ஷூட்டிங் நடந்தது. அப்போது, அந்த காலத்தில் கேரவன் வேன் எல்லாம் இல்லை. அருகில் இருந்த ஒரு வீட்டில் சென்று பிஎஸ் வீரப்பாவும், நம்பியாரும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள், இந்த ஆட்கள் மிக மோசமான ஆட்கள். பெண்களை கண்டால் விட மாட்டார்கள் என, அலறிக்கொண்டு வீட்டுக்குள் ஓடி விட்டார்களாம்.
அதே போல் ஒருமுறை நம்பியார், காரில் சென்ற போது ஒரு கும்பல் காரை வழமறித்து நிறுத்தியிருக்கின்றனர். அப்போது நம்பியாரை சுற்றி வளைத்த அந்த கும்பலில் இருந்தவர்கள், என்ன தைரியம் இருந்தா தலைவர் எம்ஜிஆரை நீ அடிப்பே, என்று எகிறிக்கொண்டு சண்டைக்கு வந்துள்ளனர். அது நடிப்பு, அதற்கு தான் எனக்கு சம்பளம் தருகின்றனர். நான் மட்டுமா, எம்ஜிஆரை அடிக்கிறேன், எம்ஜிஆரும்தானே என்னை அடிக்கிறார் என கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், தலைவர் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம். நீ அவரை இனிமேல் அடிக்க கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இப்படிதான் வில்லன் நடிகர்கள் மீதான பார்வை, ரசிகர்களுக்கு இருந்தது. அதுபோன்ற ஒரு மிரட்டலான வில்லனாக தமிழ் சினிமாவில் அசத்தியவர்தான் டேனியல் பாலாஜி. நடிகர் முரளியின் அப்பாவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் முரளி. 2வது மனைவிக்கு பிறந்தவர் டேனியல் பாலாஜி. சித்தி என்ற சீரியலில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால், அந்த டேனியல் அவரது பெயருடன் ஒட்டிவிட்டது.
டேனியல் பாலாஜி, பொல்லாதவன் படத்தில் தன் அண்ணன் கிஷோரை, ஒரு கட்டத்தில் வெட்டிக் கொல்வார். வேட்டையாடு விளையாடு படத்தில், கமல்ஹாசனையே சம்பவம் செய்ய துடிப்பார். எந்த படத்திலும் அவரது கொடூரத்தனமான வில்லன் நடிப்பு, ரசிகர்களை திகிலடைய வைக்கும். அவரது முகமும் பார்வையும் பயங்கர மனிதராகவே அவரை திரையில் சித்தரித்தது.
ஆனால் அவர் இறந்த பிறகு, அவரது கண்கள் இந்த உலகை காணப் போகிறது. அவர் தனது கண்களை தானம் செய்திருக்கிறார். இது அவரது அன்பான மனதை, கருணையை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி துவக்கத்தில் தரமணி பிலிம் இன்ஸ்டிடியூட்டில் அவர் டைரக்ஷன் படிப்பை படித்திருக்கிறார். இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. ஆனால் கடைசி வரை அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டது.





