கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில், செல்வராகவன், துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, சந்திப் கிஷன், காளிதாஸ், சரவணன் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். வடசென்னையை மையப்படுத்தி இதனை எடுத்திருக்கிறார் தனுஷ்.
இந்த திரைப்படத்தின் சூட்டிங்கை முடித்த கையோடு, இளைஞர்களை வைத்து காதல் திரைப்படம் ஒன்றையும் தனுஷ் இயக்கியிருக்கிறார். இதற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் இதில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி இயக்கத்திலும் பிசியாக இருக்கும் தனுஷ், தனது 51 வது திரைப்படத்திற்காக மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார். இந்த முறை தனுஷ் படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
மும்பையை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே கூறப்பட்டது. இப்படியான சூழலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு படத்திற்கான டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, யாரும் எதிர்பார்க்காத வகையில் குபேரா என இதற்கு டைட்டில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
அதுமட்டுமல்லாமல் படத்தில் தனுஷின் கெட்டப்பும் வித்தியாசமான வகையில் உள்ளது. குபேரா என டைட்டில் வைத்து விட்டு தனுஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்த போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக தனுஷின் 51-வது பட போஸ்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.





