நடிகர் விஷால் இப்போது நடித்துள்ள படம் ரத்னம். இந்த படம் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை டைரக்டர் ஹரி டைரக்சன் செய்திருக்கிறார். விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வழக்கமான ஹரி படமாக பரபரப்பாக இருக்கும். அதே வேளையில் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என்ற வரிசையில் தரமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக நடிகர் விஷாலுக்கு சரியான படங்கள் அமையவில்லை. தொடர்ந்து தோல்வி படங்களை அவர் தந்த நிலையில் கடந்தாண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மட்டுமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதே வேளையில் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு காரணம் பக்க பலமாக இருந்தது நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா தான் என்பதும் மறுக்க முடியாதது.
இதைத் தொடர்ந்து டைரக்டர் ஹரி இயக்கத்தில் வெளிவரும் ரத்னம் படத்தை விஷால், மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்திருக்கிறார். கடந்த வாரத்தில் ரத்னம் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரில் கதாநாயகன் விஷால், கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்ற காட்சிகள் இருந்தன. ஹரி போன்ற தரமான இயக்குனர் படத்தில் இதுபோன்ற தரம் கெட்ட வசனங்களை எப்படி அவர் அனுமதித்தார் என்று ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று ரத்னம் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் இயக்குனர் ஹரி, நடிகர் விஷால் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்கள் படம் குறித்து பல கேள்விகளை கேட்டனர். அப்போது பேசிய ஹரி, இந்த படம் வழக்கமான என் படங்களை விட சற்று வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
அப்போது ரத்னம் பட டிரைலரில், நிறைய கெட்ட வார்த்தைகள் வருகிறது. படம் முழுக்க இப்படி கெட்ட வார்த்தைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சற்று கோபமாக பதிலளித்த இயக்குனர் ஹரி, ஒரு மனிதன் தன்னிலை மறந்து கோபத்தில் பேசும்போது, கண்டிப்பாக கெட்ட வார்த்தைகள் வரும். இது எல்லோருக்கும் இயல்பான ஒன்றுதான். இதில் தப்பு எதுவும் இல்லை. மனிதர்களின் இயல்பான குணங்களில் ஒன்று. அதுவும் படத்தின் கேரக்டர் நியாயங்களை தட்டிக் கேட்டு கோபப்படுகிறார். அந்த கோபத்தில் அவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று பதில் அளித்தார்.
இதற்கு முன்பு டைரக்டர் லோகேஷ் கனகராஜ், லியோ படத்தில் நடிகர் விஜய் பேசிய கெட்ட வார்த்தைக்கும் இதேபோல்தான் ஒரு விளக்கம் கொடுத்தார். கெட்ட வார்த்தையை விஜய் பேசவில்லை அவரது கேரக்டர் தான் பேசியது என்றார். இப்போது இயக்குனர் ஹரியும் இதே வழியை பின்பற்றுவது, தவறான வழியில் இயக்குனர்கள் தமிழ் சினிமாவை கொண்டு செல்வது தெளிவாக புரிகிறது.





