விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கியது. 2023ம் ஆண்டு வரை 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கினார். எதை செய்தாலும் அதை நேர்த்தியாகவும் தன்னை விட மற்ற யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என்கிற அளவுக்கு அவரது கவனமும் உழைப்பும் சிரத்தையாக இருக்கும். அதனால் பிக்பாஸ் தொகுப்பாளராகவும் அவர் 100 சதவீதம் ஜெயித்தார்.
வாரத்தில் மற்ற 5 நாட்கள் பிக்பாஸ் பார்க்க தவற விட்டவர்கள் கூட சனி ஞாயிறு தினங்களில் சரியாக இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை காண டிவி முன்பு ஆஜராகி விடுவார்கள். ஏனெனில் கமல் பேசும் வார்த்தைகளும் போட்டியாளர்களை கண்டிக்கும் விதமும் அவ்வப்போது செய்யும் நையாண்டி தனமும் அவரது வாழ்க்கை அனுபவங்களும் கேட்கவும் பார்க்கவும் அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.
ஆனால் கமிட் ஆன படங்களில் நடிக்க வேண்டிய காரணத்தாலும் அரசியல் பணிகள் குறுக்கீடு காரணமாகவும் கடந்த 2024ம் ஆண்டில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வந்தார். ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் 2 ஆண்டுகளில் விஜய் சேதுபதியும் தொகுப்பாளராக பிக்கப் செய்துவிட்டார் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் இப்போது நடந்த வரும் சீசன் 9ல் கானா வினோத் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு செல்லும் அளவுக்கு அரோரா தான் அவரது மனதை கலைத்தார் என்று வீட்டுக்குள் இருந்த வியானா பிரவீன் ராஜ் கூறியது 100 சதவீதம் உண்மை. கானா வினோத்துடன் அரோரா பேசும் அந்த காட்சியை பார்த்த அனைவருக்குமே இது வெளிப்படையாக தெரிந்தது. இதை பலரும் இணையத்தில் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த சூழலில் அரோராவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் சேதுபதி வியானா பிரவீன் ராஜ் ஆகியோரை கண்டித்து பேசியதும் அதற்காக குறும்படம் போட்டதும் பிக்பாஸ் ரசிகர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது. எத்தனையோ பிரச்னைகளுக்கு குறும்படம் போடாத விஜய் சேதுபதி, அரோராவுக்கு முட்டுக்கொடுக்க குறும்படம் போட்டது அவசியமே இல்லாதது என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் டைட்டில் வின்னராக வேண்டிய கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறியது ஏதேச்சையாக நடந்தது அல்ல, அதற்கு அவர் தூண்டப்பட்டார் என்பதே உண்மை. அதை சுட்டிக்காட்டிய வியானா பிரவீன் ராஜை இந்த அளவுக்கு மேடையில் விஜய் சேதுபதி பேசி அவர்கள் சொன்ன கருத்தை இல்லை என்று சொல்ல வைக்க முயற்சிக்கிறார். இது முரண்பாடானது. இப்படி ஒரு தலைபட்சமாக ஒரு தொகுப்பாளர் நடக்க கூடாது. கமல் சார் மறுபடியும் நீங்களே பிக்பாஸ் நடத்த வந்துடுங்க. அப்போ தான் ஆட்டம் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





