தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்தையே மெகா ஹிட் திரைப்படமாக கொடுத்தார். அந்தப் படம் 100 நாட்கள்வரை ஓடியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் மௌன ராகம் படத்திலிருந்து அவர் காப்பி அடித்துவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்தது. அதேசமயம் அவரது மேக்கிங் அட்டகாசமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ராஜா ராணி படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு விஜய்யை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அதன்படி முதல் படமாக தெறி படத்தை இயக்கினார். அந்தப் படம் வெற்றியடைந்தாலும் இதுவும் சத்ரியன் படத்தின் காப்பி என்றும்; ஒரு காட்சி அப்படியே பாட்ஷா பட காட்சியின் காப்பி என்றும் விமர்சனங்கள் சுழற்றி அடித்தன. ஆனால் அதற்கு அட்லீ அமைதியே காத்தார்.
அந்தப் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகில் தோல்வியடைந்த மெர்சல் மெகா வெற்றி பெற்றது. இதில் விஷயம் என்னவென்றால் மெர்சல் அபூர்வ சகோதரர்கள் காப்பி, பிகில் சக் தே இந்தியா படத்தின் காப்பி என்ற விமர்சனம் பின் தொடர்ந்தது. சூழல் இப்படி இருக்க கடைசியாக அவர் ஜவான் படத்தை இயக்கினார்.
ஷாருக்கான் நடித்திருந்த அந்தப் படம் தமிழ்நாட்டில் ட்ரோல்களை சந்தித்தது. வடமாநிலங்களில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. எனவே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே விஜய்யின் தீவிர ரசிகரான அட்லீ மீண்டும் எப்போது விஜய்யை இயக்கப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்தது.
தன்னுடைய 68ஆவது படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்த பட இயக்கும் வாய்ப்பை அட்லீக்குத்தான் கொடுப்பார் என்றும் ஒரு பேச்சு உருவானது. மேலும் சமீபத்தில் அட்லீ அளித்த பேட்டியில் விஜய்யையும் ஷாருக்கானையும் வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என்றும் கூறியிருந்தார். இதனால் அந்தக் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அட்லீ கூறியிருக்கும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோபிநாத்துக்கு அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “அஜித் சாருக்காக நான் சில கதைகளை யோசித்து வைத்திருக்கிறேன். இது அவருக்குத்தான் செட் ஆகும் என்று நினைத்து சில ஒன் லைன்களையும், சில முழு கதைகளையும் தனியாகவே வைத்திருக்கிறேன். அவர் ஓகே சொன்னால் உடனே அவரை வைத்து படம் இயக்க வேண்டியதுதான்” என்றார்.





