நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். தர்பார் அண்ணாத்த எனத் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சூப்பர் ஸ்டாருக்கு, மிகப்பெரிய வெற்றியாக இந்த திரைப்படம் அமைந்தது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நெல்சன் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம், அனிருத்தின் பக்காவான இசையும், சரியான இடத்தில் சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் பயன்படுத்தியது தான் என்று அடித்துக் கூறலாம். அந்த அளவுக்கு, கிளைமாக்ஸ் காட்சியை செதுக்கியிருந்தார் நெல்சன்.
மற்றபடி படத்தின் இரண்டாம் பாதி அந்த அளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. குறிப்பாக தொய்வான திரைக்கதையால் ரசிகர்கள் கொட்டாவி விட்டபடி இருக்க, கடைசி நேரத்தில் கலந்து கட்டி அடித்து கைத்தட்டல்களை பெற்றார் நெல்சன்.
கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் ஈட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு காரை பரிசாக வழங்கியது. இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியின் மகிழ்ச்சியால் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் சுறுசுறுப்புடன் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
தற்போது அவர் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார். இந்தத் திரைப்படம் தங்கக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இது நடுவே ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளும் வேகம் எடுத்து வருகின்றன.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், நெல்சன் இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கான வேளையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. இதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் சூட்டிங் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். இப்படியான சூழலில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஹுக்கும் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடி, டைகர் கா ஹுக்கும் என பஞ்ச் டயலாக் பேசுவார். தற்போது அதனையே நெல்சன் வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.





