தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டவர் இயக்குனர் கே பாக்யராஜ். இந்திய சினிமா அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமை கே பாக்யராஜூக்கு மட்டுமே உள்ளது. அது மட்டும் இன்றி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்னுடைய கலை வாரிசு என்று அறிவித்ததும் கே பாக்யராஜை மட்டும்தான்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணி செய்தவர் கே பாக்யராஜ். குறிப்பாக 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் சிவப்பு ரோஜாக்கள் போன்ற பல படங்களில் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக பணி செய்தவர். பிறகு பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்தார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் கே பாக்யராஜ் இயக்கிய படங்கள் மாபெரும் வெற்றி படங்களாகவும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாகவும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முந்தானை முடிச்சு தாவணி கனவுகள் அந்த 7 நாட்கள் மௌன கீதம் தூறல் நின்னு போச்சு என பல படங்கள் அவரது வெற்றியை சொல்லும். தமிழ் சினிமாவில் இன்றும் மிகப்பெரிய ஒரு திரை ஆளுமையாக கே பாக்யராஜ் இருக்கிறார்.
இந்நிலையில் வருகிற ஜனவரி 7ம் தேதி நடிகர் இயக்குனர் கே பாக்யராஜ் தனது 72 வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாடுகிறார். அத்துடன் அவர் தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகளையும் நிறைவு செய்கிறார். கே பாக்யராஜ் 72வது பிறந்தநாள் விழா மற்றும் 50ம் ஆண்டு பொன்விழா இந்த இரண்டையும் கொண்டாடும் விதமாக வரும் ஜனவரி 7ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடன் கே பாக்யராஜ் அன்புள்ள ரஜினிகாந்த், நான் சிவப்பு மனிதன் போன்ற சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா குறித்து இன்னும் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்றாலும் கே பாக்யராஜ் மனைவி பூர்ணிமா ஜனவரி 7ம் தேதி அன்று ஒரு விழா இருக்கிறது.
உங்களது தேதியை இப்போதே ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளுங்கள் என்பது போன்ற ஒரு செய்தியை பல பிரபலங்களுக்கு மெசேஜ் மூலம் அனுப்பி வருகிறார். இந்த பாராட்டு விழாவில் தென்னிந்திய சினிமா நடிகர்கள் நடிகைகள் மட்டுமின்றி இந்தி பட உலகைச் சேர்ந்த அனில்கபூர் உள்ளிட்ட சில பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.





