விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மீண்டும், திரைத் துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் இரண்டு திரைப்படங்களை தயாரிக்க அவர் முன் வந்தார். இதில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். அடுத்த கட்ட சூட்டிங், சென்னையில் நடைபெறுகிறது. இதேபோல் சிம்புவை வைத்தும் ஒரு படத்தை தயாரிக்கிறார் கமல்ஹாசன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இதனை இயக்குகிறார்.
இதன் பிறகு ஹெச் வினோத்துடன் கைகோர்க்கிறார் கமல்ஹாசன். ராணுவப் பின்னணியில் கிரைம் திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகிறது. இது கமல்ஹாசன் ஏற்கனவே கையில் வைத்திருந்த தலைவன் இருக்கிறான் திரைப்படத்தின் கதைதான் என்று கூறப்படுகிறது. இதனால் திரைக்கதையை மட்டும் வினோத் எடுக்கிறாராம்.
இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்க வைக்க ஆர்யா, சித்தார்த் உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, கமல்ஹாசன் மணிரத்னம் படத்திற்கான வேலைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக உருவாகும் இதில், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான் வேடத்தில் முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது படத்திற்கு தக் லைஃப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வீடியோவுடன் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்பில் நீண்ட முடி முறுக்கிய மீசையுடன் தோன்றும் கமல்ஹாசன், என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயகன் ஊர் காயல்பட்டணம் என்று கூற ஆரம்பிக்கிறார். ஜப்பான் மொழியில் யாக்கு என்று கூறிவிட்டு அதற்கு அர்த்தம் கேங்ஸ்டர் என்று தெரிவிக்கிறார். இதனால் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் படமாக உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. மாஸாக வெளியாகி இருக்கும் இந்த வீடியோவை பார்த்து கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.





