கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக வளம் வருகிறார். அதே போல் அவர் பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். எப்போதும் கௌதம் மேனன் தயாரிக்கும் திரைப்படங்களுக்கோ அல்லது அவர் இயக்கும் திரைப்படங்களுக்கோ பொருளாதார பிரச்சனை வராமல் இருந்ததில்லை. சில நேரம் திரைப்படங்களின் வெளியீடு தாமதமாவதும் உண்டு.
அப்படி அவர் தயாரித்து இன்னும் வெளிவராமல் இடியாப்ப சிக்கலில் சிக்கிய திரைப்படம்தான் “நரகாசூரன்”. இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் உருவானபோதே கௌதம் மேனனுக்கு பல பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து கார்த்திக் நரேனுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட, இந்த புராஜெக்ட்டில் இருந்தே விலகினார் கௌதம் மேனன். அதன் பின் பத்ரி கஸ்தூரி என்பவர் இத்திரைப்படத்தை தயாரிக்க இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வரை இத்திரைப்படம் வெளியாகவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டில் கூட சோனி லைவ் ஓடிடி நிறுவனம் இத்திரைப்படத்தை வாங்கியுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆனாலும் இத்திரைப்படம் இன்றும் வெளியாகவில்லை. இத்திரைப்படம் எப்போது வெளிவரும் என்ற அறிவிப்பும் வரவில்லை.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சினிமாவில் நாம் எந்நேரமும் உஷாராக இல்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் சினிமா நம்மை கவிழ்த்துவிடும் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர்தான் கார்த்திக் நரேன். அவருடைய இரண்டாவது படத்தில் அவரைச் சுற்றி எவ்வளவு பெரிய சூழ்ச்சி நடந்தது என்பது அவருக்கு தெரியாமல் போய்விட்டது” என கூறிய அவர்,
“கார்த்திக் நரேனின் பெயருக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. இன்னொருவர் அவரை ‘வா நாம் பார்ட்னராக படம் பண்ணலாம்’ என்று அழைத்துப்போய் எல்லா உரிமத்தையுமே கார்த்திக் நரேனுக்கு தெரியாமல் விற்றுவிட்டார். படம் வெளியாவதாக இருந்த தருணத்தில் பல இடங்களில் பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக வாங்கிய பணத்தை வேறு ஒரு படத்தில் போட்டு பயங்கரமாக கெடுத்துவிட்டார். இப்போது அந்த படமே வராமல் போய்விட்டது. இயக்குனர் கௌதம் மேனன்தான் அவ்வாறு செய்தது. அவருடன் பயணித்த பலரிடம் கேட்டுப்பார்த்தால் பல மோசமான கதைகளை கூறுவார்கள்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





