நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், பிரேம்ஜி அமரன், யோகி பாபு, வைபவ், அஜ்மல், ஜெயராம் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தில் 50 சதவீத சூட்டிங் பணிகள் நிறைவடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. படத்தை ஜூல் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியான சூழலில், நடிகர் விஜய் திடீரென தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற புஸ்ஸி ஆனந்த், கட்சியின் பெயர் குறித்து பதிய விண்ணப்பித்தார். இதில் தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
அதில் இங்கு ஊழல் மொழிந்த அரசியல் கலாச்சாரம் ஒரு புறம், பிளவுவாத அரசியல் மற்றொருபுறம் என முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகள் நிறைந்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தனது விஜய் மக்கள் இயக்கம், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் ஒரு தன்னார்வ இயக்கத்தால் முழுமையாக சமூக பொருளாதார அரசியல் பணிகளை செய்து விட முடியாது என்று கூறினார்.
வரும் நாடாளுமன்றத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க போவதில்லை எனவும் தெளிவாக தெரிவித்து இருந்தார் விஜய். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நமது இலக்கு என்றும் விஜய் கூறியிருந்தார். அரசியல் என்பது பொழுதுபோக்கல்ல புனிதமான பணி என்றும், அதன் உயரம் மட்டுமல்லாமல் அகல நீளத்தையும் எம் முன்னோர்கள் வழியில் நின்று பார்த்து பக்குவப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது ஒப்புக் கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியல் பணியில் ஈடுபட போவதாகவும் விஜய் அறிவித்திருந்தார். இப்படியான சூழலில் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. அதனுடன் விஜய் தனது, சினிமா பயணத்தை முடித்துவிட்டு அரசியல் பயணத்தில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க, மீம்ஸ்களும் இணையத்தில் தெறிக்க விடப்பட்டன. அதில் லோகேஷ் கனகராஜின் லியோ பார்ட் 2 மற்றும் எல் சி யு என்ன ஆனது என்ன ஆனது என்றும் பலர் கூறி வந்தனர். இப்படியான சூழலில் இயக்குனர் ஏற்கனவே, விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் வரும் காட்சியை ஏற்கனவே எடுத்து விட்டதாகவும், லியோ திரைப்பட ஷூட்டிங்கில் இந்த பணிகளை முடித்ததாகவும் சிலர் கூறி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மையான தெரியாத சூழலில், லோகேஷ் கனகராஜ் தரப்பிடமிருந்து வரும் பதிலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





