கோலிவுட்டின் முன்னணி நடிகரான சூர்யாவின் கதை தேர்வுகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கின்றன. ஓடிடி வளர ஆரம்பித்த காலகட்டத்தில் நேரடியாக அதற்கு படத்தை கொடுக்க பலரும் யோசித்த சூழலில் சூர்யாவோ சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களை ஓடிடியில் களமிறக்கினார். அந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகி விமர்சன ரீதியாக சூர்யாவுக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்தது.
முக்கியமாக சூரரைப் போற்று திரைப்படம் சூர்யாவுக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் சூர்யா எப்படி ஜெய் பீம் படத்தில் நடித்தாரோ அதுபோன்று பிற முன்னணி நடிகர்களும் நடிக்க வேண்டும் என்ற குரல்களும் கேட்க ஆரம்பித்தன. இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இந்தச் சூழலில் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சூர்யா. 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படமானது மொத்தம் பத்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.
படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இதுவரை இந்தப் படம் 400 கோடி ரூபாய்கும் மேல் ப்ரீ பிஸ்னெஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியானது. அதில் சூர்யாவின் லுக்கும், சிவாவின் மேக்கிங்கும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. சமீபத்தில்கூட சூர்யா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் வெளியாகி மெர்சல் செய்தது.
இந்நிலையி கங்குவா படம் குறித்து பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான மதன் கார்க்கி பேசுகையில், ”சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் ஒரு புதிய உலகம். புதுமையான அனுபவத்தை கொடுக்கக்கூடியது. கங்குவா படத்துக்காக இயக்குநர் சிவாவுடன் இணைந்து பணியாற்றிவருகிறேன். அதுமட்டுமின்றி படத்தி ஒரு பாடலையும் நான் எழுதியிருக்கிறேன்.
கங்குவா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகச்சிறந்தது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ரசிகர்களும் வரவேற்பார்கள் என நினைக்கிறேன். க்ளிம்ப்ஸ் வீடியோவில் வந்த மாறுபட்ட தமிழ் பேச்சுதான் படத்தில் இருக்கும். அதேசமயம் அது யாருக்கும் புரியாமல் இருக்காது. புரியும்படிதான் இருக்கும்” என்றார். பாகுபலி படத்துக்காக் க்ளிக்கி என்ற புதிய மொழியை உருவாக்கி அதில் மதன் கார்க்கி வசனம் எழுதியது நினைவுகூரத்தக்கது.





