மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம், வாழை சுமக்கும் கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையை பிரதிபலித்தது.
தனது சொந்த ஊரான புளியங்குளத்தில் வாழை சுமக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை கண்முன்னே காட்சிப்படுத்தியிருந்தார் மாரி செல்வராஜ். சிறுவனின் பார்வையில் இருந்து அந்த தொழில் எவ்வளவு கடுமையானது என்றும், அதனால் அவன் படும் அவஸ்தையையும் அவர் திரையரங்கில் படம் பார்க்க வருபவர்களுக்கு கூறியிருந்தார்.
குறிப்பாக படத்தின் இறுதி காட்சி பலரையும் நடுங்கச் செய்தது என்றே கூறலாம். ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்த ஒரு விபத்தை கதைக்களமாக கொண்டு தான் இந்த திரைப்படத்தின் கதையை அவர் எழுதியிருந்தார். அந்த விபத்து காட்சி தான் படத்தில் முழு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதனை மிகச் சரியாக கையாண்டிருந்தார் மாரி செல்வராஜ்.
இருப்பினும் படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்கு சற்று உறுத்தலையே ஏற்படுத்தியது. ஆசிரியரின் கைகுட்டையை மாணவன் முகர்ந்து பார்ப்பது போன்ற அளவுக்கு மீறிய காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்தன. பஞ்சுமிட்டாய் பாடலுக்காகவே அந்த ஆசிரியர் கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் திணித்ததாகவும் பலர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் இது எதுவும் வாழைப்படத்தின் வசூலை துளி அளவு கூட பாதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். கபடி விளையாட்டை மையப்படுத்தி தூத்துக்குடி மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. கபடி வீரர் மனத்தி கணேசன் என்பவரின் வாழ்க்கையை தான் இந்த திரைப்படம் பிரதிபலிக்கிறது.
இந்த படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து படம் இயக்க இருக்கிறார். லப்பர் பந்து திரைப்படத்தை தயாரித்து அதிகளவு லாபம் ஈட்டிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இந்த கதையே மிகவும் நன்றாக இருப்பதாகவும் இதை கேட்ட உடனே கார்த்தி ஓகே சொல்லி விட்டதாகவும் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த ஆண்டு இறுதியிலேயே இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





