தமிழ் சினிமாவில் நான்கே நான்கு திரைப்படங்கள் கொடுத்து புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பட்டியலின சமூகத்தினரின் வாழ்வியலையும், அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும், ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய அடக்குமுறைகளையும் திரையில் தோல் உரித்து காட்டியவர்களில் மிக முக்கியமானவர் இவர்.
பரியேறும் பெருமாள் முதல் கர்ணன் மாமன்னன் வாழை என இவரது அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் சாதிய அரசியலால் பட்டியலின மக்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மாரி செல்வராஜ் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.
இதில் பரியேறும் பெருமாள் திரைப்படம் வேறு ஒரு பாய்ச்சலை காட்டியது. அதன் பிறகு வெளிவந்த கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அது பேசு பொருளாக மாறியது. அதன் பிறகு வெளிவந்த வாழை திரைப்படத்தையும் பலர் இங்கு பேசினார்கள்.
சொல்லப்போனால் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளிவந்த போது ஹாட் டாபிக்காக இருந்தது. அதேசமயம் ஓ டி டி தளத்தில் வெளியானபோது அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. வாழை திரைப்படத்திற்கு எதிராக விமர்சனங்களே முன்வைக்கப்பட்டன. இப்படியான சூழலில் தான் தனது அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மாரி செல்வராஜ்.
தற்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அவர் பைசன் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கபடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை தான் இந்த படத்தில் காட்டுகிறார் மாரி செல்வராஜ்.
இதற்குப் பிறகு அவர் கார்த்தியுடன் இணைகிறார். இந்த படத்தின் கதை, இயக்குனர் தந்தையின் கதை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தனுசுடன் மாரி செல்வராஜ் இணைகிறார். இதனை அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அண்மையில் விஜய் சேதுபதியை சந்தித்து மாரி செல்வராஜ் ஒரு கதையை கூறியதாகவும், இது இருவருக்கும் பிடித்துப் போனதால் விரைவில் அவர்கள் பணியாற்றுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் திரைத்துறை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.





