ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 10ம் தேதி நாளை மறுதினம் ரிலீஸ் ஆகும் பராசக்தி படத்திற்கு இது மிகப்பெரிய பலமாக அமையுமா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது இதனால் பராசக்தி படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வராமல் தள்ளிப் போனது பராசக்தி படத்திற்கு ஒருவகையில் நன்மையாக இருந்தாலும் அது சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது என்பதுதான் கேள்வியாக உள்ளது. தமிழில் பராசக்தி சிங்கிளாக திரைக்கு வருகிறது. நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் நடிகர் சிரஞ்சீவி நடித்த மனசங்கர வரபிரசாத் காரு என இந்த 2 தெலுங்கு படங்கள் மட்டுமே வருகின்றன.
அதனால் பராசக்தி படத்திற்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனநாயகன் படத்துடன் பராசக்தி போட்டி என்கிற பஞ்சாயத்தும் இப்போது இல்லாமல் போய்விட்டது. ஆனால் வசூல் ரீதியாக இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெறுமா என்பதுதான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
ஏனென்றால் பராசக்தி படம் கடந்த 1960 – 65 காலகட்டத்தில் நடந்த போராட்ட கதைக்களமாக உள்ளது. படத்தின் கதை மற்றும் கமர்சியல் விஷயங்களை பொறுத்தே ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமையும். நிறைய தியேட்டர்களில் பராசக்தி படத்தை திரையிட்டாலும் படத்தின் கதை திரைக்கதை மற்றும் கதைக்களமும் மக்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களும் படத்தில் இல்லை என்றால் பராசக்தி வெற்றிகரமாக ஓடுவது கடினம்.
இதற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பல படங்கள் இப்படித்தான் தோல்வியை சந்தித்து இருக்கின்றன. பெரிய நடிகர்கள் பெரிய இயக்குனர் பெரிய பேனர் அதிகமான தியேட்டர்கள் என இருந்தாலும் இதையெல்லாம் விட கதை தான் படத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியம். அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்துக்கு எதிராக சோசியல் மீடியாவில் பொங்குவதும் அந்த படத்துக்கு ஒரு வகையில் பாதிப்பை தர வாய்ப்புள்ளது.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் வராதால் பராசக்தி படம் பார்க்க நிறைய ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் கதைக்களம் நிச்சயமாக ரசிகர்கள் விரும்புகிற ஒரு முக்கியமான பிரச்னையை மையப்படுத்தி இருப்பதால் பராசக்தி படத்திற்கு ஒரு அபரிமிதமான வரவேற்பு கிடைக்கும் என்றும் ஒரு தரப்பினர் உறுதியாக கூறியிருக்கின்றனர்.





