மறைந்த இயக்குனர் பாரதிராஜாவுக்காக கவிஞர் வைரமுத்து தனது முகநல் பக்கத்தில் கவிதை எழுதியிருக்கிறார். அந்த வரிகள் பின்வருமாறு, பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டார் பாரதிராஜா. 83 ஆண்டுகளுக்கு முன்னே தமிழர்கள் பெற்ற ஒரு புதையலைக் குழிதோண்டி மீண்டும் புதைத்துவிட்டோம் பூமிக்குள்.
மேற்குத்தொடர்ச்சி மலைகளே கள்ளிக்காடே கரடே நதியே பச்சைத் தாவரங்களே பாடும் பறவைகளே வைகை அணைமீது மோதும் வருசநாட்டுக் காற்றே உங்கள் மகனை உங்கள் மடியில் ஒப்படைத்து விட்டோம். உடைந்த சொற்களின் கதறல்கள், வட்டார வழக்கில் புலம்பல்கள், கண்ணாடிப் பெட்டியைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்ட மாதரார்.
ஒப்பாரியில் தாலாட்டுப் பாடியே தங்கள் மகனைத் தூங்க வைத்துவிட்டார்கள் தாய்மார்கள். நாங்கள் யாரும் கோரிக்கை வைக்காமலே அரசு மரியாதையளித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்கள் மண்ணின் நன்றி. துணையிருந்த தோழர்களை என்னால் மறக்க முடியாது.
மாண்புமிகு அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னியரசு ஆட்சியர் வைத்தியநாதன், காவல்துறை டி.ஐ.ஜி சசிமோகன், கண்காணிப்பாளர் சினேகப்பிரியா, செந்தமிழன் சீமான் மற்றும் காலம் தூரம் பாராமல் ஓடிவந்த கலைக் குடும்பத்தார். நட்பு வட்டாரங்களுக்கும் வெற்றித் தமிழர் பேரவை உறவுகளுக்கும் நன்றி.
அஞ்சலியில் விழுந்த ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். இறுதி மரியாதையை ராஜ மரியாதையாக்கிய காவல் துறைக்கு ஒரு கைகூப்பு. ஊடக நண்பர்கள் அத்துணை பேருக்கும் எங்கள் தலை வணக்கம்.
ஓய்வுகொள் இமயமே! உன் அடக்கம் முடிந்த அதே தருணம் தென்மேற்குப் பருவக் காற்று தேனிப் பக்கம் வீசிச் சிறு தூறலிட்டுச் சென்றது. ஏன் தெரியுமா? உன் குழியில் தள்ளப்பட்ட பச்சை மண்ணிலிருந்து உனக்கு மண்வாசனை வீசத்தான் என்று அந்த கவிதையில் தன் உயிர் நண்பர் பாரதிராஜாவுக்கு கவிதாஞ்சலி செலுத்தியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.





