தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை கடப்பதே நமது ஹீரோக்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. இதில் ரஜினி நடித்த வேட்டையன் கமல் நடித்த இந்தியன் 2 விஜய் நடித்த தி கோட் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 தனுஷ் இயக்கிய ராயன் சூர்யா நடித்த கங்குவா விஜய் சேதுபதி நடித்த மகாராஜா சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ஆகிய 8 படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை இந்த ஆண்டில் கடந்திருக்கின்றன.
இதில் விஜய் நடித்த தி கோட் 455 கோடி ரூபாய் வசூலில் முதலிடம், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் 325 கோடி ரூபாய் வசூலில் 2ம் இடம், ரஜினி நடித்த வேட்டையன் ரூ. 265 கோடி வசூலில் 3ம் இடம் பிடித்துள்ளது. மற்ற 5 படங்கள் 200 கோடி ரூபாயை கூட எட்டவில்லை. இந்த ஆண்டில் வெளியான 250 தமிழ் படங்களில் 20 படங்கள்தான் வெற்றிப் படங்களாக இருக்கின்றன.
அதே நேரத்தில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள கங்குவா இந்தியன் 2 படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தெலுங்கில் இருந்து வெளியான புஷ்பா 2 படம், படம் ரிலீஸான முதல் நாளிலேயே 275 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.
இயக்குனர் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா பகத் பாசில் சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் கடந்த 5ம் தேதி பான் இந்தியா படமாக வெளியானது. தமிழ் இந்தி மலையாளம் கன்னடம் பெங்காலி என பல மொழிகளில் டப்பிங் செய்யபப்ட்ட இந்த படம் 7 நாட்களில் 1006 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
புஷ்பா 2 பிரிமியர் ஷோ படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாவலர் ஆண்டனி, தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்ளிட்டோரை ஐதராபாத் போலீசார் கைது செய்து, பின்பு ஜாமினில் விடுவித்தனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
புஷ்பா 2 படத்துக்கு இவ்வளவு பரபரப்பும், பிரச்னைகளும் நீடித்த நிலையிலும் புஷ்பா 2 படம் 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி ரிலீஸான இந்த படம், நேற்று 30ம் தேதி இரவு 9.30 நிலவரப்படி உலகளவில் மொத்தம் 1760 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக, புஷ்பா படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய சினிமாவையே மிரட்சி அடைய செய்துள்ளது.





